நடிகர் பிரதீப் ரங்கநாதன், க்ரித்தி ஷெட்டி மற்றும் எஸ்.ஜே. சூர்யா நடித்த ‘LIK’ திரைப்படத்தை இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியின் போது, விக்னேஷ் சிவன் நடிகர் எஸ்.ஜே. சூர்யாவுடன் பணியாற்றிய அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.
அவர் கூறியதாவது, “நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலத்தில், எஸ்.ஜே. சூர்யா சாரின் ‘அன்பே ஆருயிரே’ திரைப்படத்தில் ஜூனியர் ஆர்டிஸ்ட்டாக நடித்துள்ளேன். அப்போது இரவு நேரங்களில் சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டுக் கொண்டிருந்தன. அவர் ஒரு நாற்காலியில் அமர்ந்தபடியே தூங்கிவிடுவார். ஆனால் ‘ரெடி’ என்று சொன்னவுடன் உடனே உற்சாகமாக எழுந்து காட்சிக்குள் செல்வார். அந்த அளவுக்கு அர்ப்பணிப்பு கொண்டவருடன் இன்று சேர்ந்து வேலை செய்வது எனக்கு பெருமையாக உள்ளது,” என்றார்.
மேலும், “எஸ்.ஜே. சூர்யா சாரின் குறிக்கோள் மிகவும் உயர்ந்தது. அவரைப் போன்ற ஒருவரை நான் இதுவரை பார்த்ததில்லை. அவரின் அர்ப்பணிப்பை குறிப்பிட்டு நான் அவருக்கு ‘Dedic’ மற்றும் ‘Sincy’ போன்ற பெயர்களை வைத்துள்ளேன். ஒரு காட்சியில் அவர் வேஷ்டி அணிந்து நடிக்க வேண்டியிருந்தது. அந்தக் காட்சிக்காக பல மணி நேரம் அவர் உட்காராமல் நின்றபடியே இருந்தார். காரணம், வேஷ்டி சுருண்டு போகக்கூடும் என்பதால் தான். பின்னர் நான் பார்த்தபோது, அவரது காலில் முன்பே ஏற்பட்ட காயம் இருந்தும் அவர் அதை பொருட்படுத்தாமல் அத்தனை நேரம் நின்றிருந்தார். இது சாதாரண விஷயம் அல்ல; அவரின் சிரத்தை மிக அதிகம்,” என்று விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார்.
