இயக்குநர் மனு ஆனந்த் இயக்கத்தில், ஆர்யா, கவுதம் ராம் கார்த்திக், சரத்குமார், மஞ்சு வாரியர், அதுல்யா ரவி, அனகா உள்ளிட்ட பலர் நடித்துள்ள உளவுத்துறை பின்னணியைக் கொண்ட ‘மிஸ்டர் எக்ஸ்’ திரைப்படம் ஏப்ரல் 17ஆம் தேதி வெளியாக உள்ளது. விஷ்ணு விஷால் நடித்த ‘எப்ஐஆர்’ திரைப்படத்தை இயக்கிய மனு ஆனந்த், இயக்குநர் கவுதம் மேனனின் உதவியாளராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
‘மிஸ்டர் எக்ஸ்’ திரைப்படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் பேசிய மனு ஆனந்த், “1960 முதல் 2020 வரை நடந்த 7 உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இந்தக் கதை உருவாக்கப்பட்டுள்ளது. உளவாளிகளை மையமாகக் கொண்டு பல திரைப்படங்கள் வந்திருந்தாலும், இந்த படம் தனித்துவமான கதை சொல்லல் முறையைக் கொண்டிருக்கும். இந்தப் படம் உருவாக காரணமான இரண்டு முக்கிய நபர்கள் உள்ளனர். ஆனால், அவர்களைப் பற்றி வெளிப்படையாக பேச முடியாது. உளவாளிகளின் வாழ்க்கை மிகவும் மர்மமும் சுவாரஸ்யமும் நிறைந்தது,” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், இந்தப் படத்தில் நடித்த அனைத்து நடிகர்களும் தங்களது கதாபாத்திரங்களை முழுமையாக உணர்ந்து அர்ப்பணிப்புடன் நடித்துள்ளனர் என்றும் அவர் கூறினார். குறிப்பாக, மஞ்சு வாரியரை இந்தப் படத்தில் நடிக்க வைக்க அதிக முயற்சி எடுத்ததாகவும், கதை அவருக்கு பிடித்ததால் அவர் ஒப்புக் கொண்டதாகவும் தெரிவித்தார். மேலும், சுமார் 70 வயதிலும் நடிகர் சரத்குமார் ராஜஸ்தான் பாலைவனத்தில் ஆபத்தான காட்சிகளில் நடித்துள்ளார் என்றும் கூறினார். “இந்தப் படம் உங்களுக்கு பிடித்திருந்தால் ஆதரவு அளிக்கவும்; பிடிக்கவில்லை என்றால் ஆதரவு தேவையில்லை. தரமற்ற திரைப்படங்களை ரசிகர்கள் ஊக்குவிக்க வேண்டாம். இந்தப் படம் கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும்,” என அவர் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.
