வடஇந்தியாவில் இருந்து தமிழகத்திற்கு வந்து, ஒரு பெரிய நடிகராக உருவெடுக்க முயலும் நட்டி நட்ராஜ் மீது, அவரை அடுத்த எம்.ஜி. ராமச்சந்திரன் போன்றவராக உயர்த்த வேண்டும் என்ற கனவை கொண்ட ஜமீன்தாராக தம்பி ராமையா செயல்படுகிறார். தனது சொத்துக்களையே விற்று, நட்டி நட்ராஜின் வளர்ச்சிக்காக முழுமையாக அர்ப்பணிப்புடன் செயல்படுகிறார். அதன் விளைவாக, படிப்படியாக முன்னேறி, தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக நட்டி நட்ராஜ் உருவாகிறார். இதன் பின்னர், அவருக்குள் அரசியல் ஆசையையும் தம்பி ராமையா தூண்டுகிறார். இதனால், பல்வேறு தரப்பிலிருந்து அவருக்கு அழுத்தங்களும் சவால்களும் உருவாகின்றன.
இத்தகைய சவால்களை மீறியும், நட்டி நட்ராஜ் தனது அரசியல் கட்சியைத் தொடங்கி, முதல்வராக வேண்டும் என்ற உறுதியான முடிவை எடுக்கிறார். இந்தப் பயணத்தில், தம்பி ராமையா, எம்.எஸ். பாஸ்கர் மற்றும் இளவரசு ஆகியோர் அவரது வலதுகரங்களாக இருந்து உதவுகின்றனர். இதற்கிடையில், தேர்தல் தேதியும் அறிவிக்கப்படுகிறது, மேலும் அரசியல் சூழல் தீவிரமடைகிறது.
தனிப்பட்ட வாழ்க்கையிலும் அரசியல் துறையிலும் பல சிக்கல்களை எதிர்கொள்ளும் நட்டி நட்ராஜ், ஒரு கட்டத்தில் முக்கியமான முடிவை எடுக்கிறார். அந்த முடிவு என்ன? அதன் பின்னணி என்ன? தேர்தல் முடிவுகள் எவ்வாறு அமைந்தன? என்பவற்றுக்கு விடை தருவது தான் இந்தக் கதையின் மீதிப் பகுதி. தடுமாறும் தமிழ் உச்சரிப்புடன் பேசும் நடிகராகவும், அரசியல் சூழ்நிலைகளில் புத்திசாலித்தனமாக நகரும் தலைவராகவும் நட்டி நட்ராஜ் சிறப்பாக நடித்து கவனம் ஈர்க்கிறார். அவரது நடை, உடை, பாவனை ஆகிய அனைத்திலும் புதிய முகமாக அவர் வெளிப்படுகிறார்.
ஜமீன்தாராக நடித்துள்ள தம்பி ராமையா தனது நடிப்பால் தனி கவனம் ஈர்க்கிறார். பல திருப்பங்களைக் கொண்ட அவரது கதாபாத்திரம் ரசிக்க வைக்கிறது. நெல்லை தமிழ் உச்சரிப்பில் நடித்துள்ள எம்.எஸ். பாஸ்கர் மற்றும் இயல்பான நடிப்பால் கவரும் இளவரசு ஆகியோரும் தங்களின் திறமையை வெளிப்படுத்தியுள்ளனர். மேலும் ஷ்ரித்தா ராவ், சாந்தினி தமிழரசன், யாஷிகா ஆனந்த், தலைவாசல் விஜய், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட அனைவரும் தங்களுக்கு வழங்கப்பட்ட கதாபாத்திரங்களைச் சரியாக நிறைவேற்றியுள்ளனர். பி.ஜி. முத்தையா ஒளிப்பதிவும், தர்புகா சிவா இசையும் படத்துடன் நன்றாக ஒட்டிக்கொண்டு அதன் உணர்வுகளை வலுப்படுத்துகின்றன.
அனைவருக்கும் பரிச்சயமான அரசியல் நிகழ்வுகளை கமர்ஷியல் வடிவில் வெளிப்படுத்திய விதம் இந்தப் படத்தின் முக்கிய பலமாகும். அதே நேரத்தில், சில இடங்களில் தர்க்க ரீதியான குறைபாடுகள் காணப்படுகின்றன. சிலருக்கு விதிவிலக்கு அளித்து, சில அரசியல் மற்றும் பிரபலங்களை மறைமுகமாக நையாண்டி செய்த விதமும் சுவாரஸ்யமாக அமைந்துள்ளது. சமகால அரசியலை பொழுதுபோக்கு அம்சங்களுடன் இணைத்து, பார்வையாளர்களை சிரிக்கவும் ரசிக்கவும் வைக்கும் வகையில் உமாபதி ராமையா இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.
