அசாம் மாநிலத்தைச் சேர்ந்த கயாடு லோஹர், முதலில் மாடல் அழகியாக தனது பயணத்தைத் தொடங்கி, ‘முகலிபட்டே’ என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அதன் பின்னர் ‘பத்தொன்பதாம் நூற்றாண்டு’ என்ற படத்தின் மூலம் மலையாளத் திரையுலகிலும் அறிமுகமாகி, தொடர்ந்து ‘டிராகன்’ திரைப்படத்தின் மூலம் தமிழிலும் அறிமுகமானார்.
தற்போது, இன்றைய நிலையில் அதிகமான திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வரும் நடிகைகளில் ஒருவராக கயாடு லோஹர் திகழ்கிறார். மலையாளத்தில் ‘பள்ளிச்சட்டம்பி’, ‘ஐஎம்கேம்’, ‘தாரம்’ ஆகிய மூன்று படங்களில் நடித்து வருகிறார். அதேபோல் தமிழில் ‘இதயம் முரளி’, ‘இம்மார்ட்டல்’ மற்றும் நடிகர் சிம்புவின் 49வது திரைப்படத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறார். மேலும் ‘தி பாரடைஸ்’ என்ற தெலுங்கு திரைப்படத்திலும் அவர் நடித்து வருகிறார். இவற்றில் ‘இதயம் முரளி’ திரைப்படம் படப்பிடிப்பு முடிந்திருந்தாலும், அதன் வெளியீடு தாமதமாகி வருகிறது. அடுத்ததாக வெளியாக உள்ள படம் மலையாளத்தில் தயாராகியுள்ள ‘பள்ளிச்சட்டம்பி’ ஆகும். இந்தப் படத்தில் அவர் டொவினோ தாமஸுடன் இணைந்து நடித்துள்ளார்.
‘குயின்’, ‘ஜன கண மன’ போன்ற திரைப்படங்களை இயக்கிய டிஜோ ஜோஸ் ஆண்டனி இயக்கியுள்ள இந்த படம், 1950களில் நடைபெறும் காலக்கட்டத்தை அடிப்படையாகக் கொண்ட பீரியட் திரைப்படமாக உருவாகியுள்ளது. இப்படம் வருகிற ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாக உள்ளது. மேலும், இந்த படம் தமிழிலும் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
