நடிகை அபிநயா தமிழில் நாடோடிகள், ஈசன், மார்க் ஆண்டனி உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். பேச முடியாத, கேட்க முடியாத மாற்று திறனாளிகள் இருந்தாலும், தனது திறமையின் மூலம் திரையுலகில் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கியுள்ளார். தற்போது சமுத்திரக்கனி நடித்துவரும் கார்மேனி செல்வம் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் அவர் நடித்துள்ளார்.
தனது திரைப்பயணம் குறித்து அவர் பகிர்ந்துகொள்ளும்போது, “நான் சிறுவயதில் என் தந்தையுடன் ஸ்கூட்டரில் செல்லும் போது, ஐஸ்வர்யா ராய் அவர்களின் போஸ்டரை பார்த்து, நானும் ஒருநாள் நடிகையாக வேண்டும் என்ற ஆசை கொண்டேன். அந்தக் கனவை என் தந்தை நனவாக்கினார்.
எனக்கு கேட்க முடியாத நிலையிலும், பேச முடியாத நிலையிலும் இருந்தாலும், சினிமாவில் சிறப்பாக நடிக்க என்னைத் தயார் செய்து கொண்டேன். எனது இரு அண்ணன்களும், என் தந்தையும் எனக்கு பெரும் ஆதரவாக இருந்தனர். அதன் பின்னர், என் தந்தையைப் போன்றவராக இருக்கும் இயக்குநர் சமுத்திரக்கனி என்னை ஊக்கப்படுத்தினார். அவரின் ஆதரவால் சினிமாவில் நான் ஒரு பெயரைப் பெற முடிந்தது. நான் நடிகையாக வேண்டும் என்ற கனவை கொண்டிருந்தேன்; அதை நிறைவேற்ற பலரும் எனக்கு துணைநின்றனர்,” என்று தெரிவித்துள்ளார்.
