‘பிச்சைக்காரன்’ திரைப்படத்திற்குப் பிறகு இயக்குநர் சசி மற்றும் நடிகர் விஜய் ஆண்டனி இணையும் புதிய திரைப்படம் ‘நூறு சாமி’ ஆகும். இந்த திரைப்படத்தை விஜய் ஆண்டனியே தயாரித்து, அதில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். அவருடன் சுவாசிகா, அஜய் திஷான், கருணாஸ், லிஜோ மோல் ஜோஸ், காவ்யா அனில் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு தர்ஷன் கிர்லோஷ் ஒளிப்பதிவு செய்துள்ளதுடன், பாலாஜி ஸ்ரீராம் இசையமைத்துள்ளார்.
இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் ஒரே கட்டமாக முழுமையாக நிறைவு பெற்றுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. மேலும், இப்படத்தின் முதல்பார்வை போஸ்டரும் வெளியிடப்பட்டு, இந்த படம் கோடை விடுமுறையை முன்னிட்டு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் சசி, ‘பூ’ திரைப்படத்திற்குப் பிறகு மீண்டும் கிராமிய பின்னணியில் இந்த கதையை உருவாக்கியுள்ளார். இதில் கரும்பு விவசாயிகளின் வாழ்க்கை மற்றும் அவர்கள் சந்திக்கும் சிக்கல்கள் முக்கியமாக எடுத்துக்காட்டப் படுகின்றன. கரும்புக்கு உரிய விலை கிடைக்காமல், சர்க்கரை ஆலைகளுக்கு குறைந்த விலைக்கு விற்க வேண்டிய கட்டாய நிலை, அதில் இடம்பெறும் சதிகள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆதிக்கம் போன்ற சமூக பிரச்சினைகள் இந்த படத்தில் வெளிப்படுத்தப் படுகின்றன. இந்த படத்தில் விஜய் ஆண்டனி கரும்பு விவசாயியாக நடித்துள்ளதுடன், அவரது மனைவியாக சுவாசிகா நடித்துள்ளார். “இரத்தம், வியர்வை மற்றும் பிணைப்புகளின் பயணம் – அதுவே அவர்களின் வாழ்க்கை” என்று இந்த திரைப்படத்தின் கருத்தை விஜய் ஆண்டனி சுருக்கமாக விளக்கியுள்ளார்.
