‘கைதி’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பரவலாக கவனம் பெற்றவர் நடிகர் அர்ஜுன் தாஸ். அதன் பின்னர் ‘மாஸ்டர்’, ‘விக்ரம்’ போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே தனித்த இடத்தைப் பெற்றார். மேலும் ‘அநீதி’, ‘போர்’, ‘ரசவாதி’, ‘பாம்’ போன்ற திரைப்படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். இதன் மூலம் தென்னிந்திய திரையுலகில் குறிப்பிடத்தக்க நடிகர்களில் ஒருவராக அவர் தொடர்ந்து முன்னேறி வருகிறார்.
இந்த நிலையில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட ஒரு பதிவு ரசிகர்களிடையே பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. அந்த பதிவில், “ஒருவரை நீங்கள் உயிராக நேசிக்கும் போது, அதே நபர் உங்கள் இதயத்தை உடைத்துவிட்டால், அதிலிருந்து மீண்டு வாழ்க்கையில் எப்படி முன்னேறுவது?” என்று எழுதியுள்ளார்.
மேலும் அந்த பதிவுடன் உடைந்த இதயத்தை குறிக்கும் எமோஜியையும் இணைத்துள்ளார். இதனால் அவர் பகிர்ந்திருக்கும் பதிவு உண்மையில் காதல் பிரிவை குறிக்கிறதா அல்லது அவர் நடித்துவரும் ஏதேனும் திரைப்படத்தின் விளம்பர முயற்சியின் ஒரு பகுதியாகவா உள்ளது என்ற கேள்வியை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் எழுப்பி வருகின்றனர்.
