பாரதிராஜா இயக்கிய ‘அன்னக்கொடி’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானவர் நடிகை சுபிக்ஷா கிருஷ்ணன். அதன் பின்னர் ‘கடுகு’, ‘கோலிசோடா-2’, ‘கண்ணை நம்பாதே’, ‘சந்திரமுகி-2’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடம் தனித்துவமான கவனத்தை பெற்றார். தமிழ் சினிமாவைத் தாண்டியும், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் உருவான பல படங்களிலும் அவர் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தியுள்ளார். தற்போது மூன்று புதிய திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி தொடர்ந்து பிஸியாக பணியாற்றி வருகிறார்.
நடிப்பைத் தவிர, சுபிக்ஷா ஒரு திறமையான பரதநாட்டியக் கலைஞரும் ஆவார். திரைப்படங்களில் நடிக்கும் பணிகளுக்கு இடையே, அவர் நடத்தி வரும் நடனப் பள்ளியில் மாணவர்களுக்கு பரதநாட்டியத்தையும் கற்றுக் கொடுத்து வருகிறார். அதே சமயம் பல்வேறு மேடை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று தனது பாரம்பரிய நடனக் கலை திறமையை வெளிப்படுத்தி வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் சென்னை மயிலாப்பூரில் உள்ள புகழ்பெற்ற கபாலீஸ்வரர் கோயிலில் திரண்டிருந்த பக்தர்கள் முன்னிலையில் பரதநாட்டியம் ஆடி பாராட்டுகளை பெற்றார்.
இதுகுறித்து சுபிக்ஷா கிருஷ்ணன் கூறியதாவது, “பரதநாட்டியக் கலை தெரிந்த நடிகையாக இருப்பது எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது. திரைப்படங்களில் நடிப்பதற்கும் இந்தக் கலை பல்வேறு வகைகளில் உதவியாக இருக்கிறது. அது மட்டுமல்லாமல், என் இயல்பு வாழ்க்கையிலும் பரதநாட்டியம் எனக்கு பல நல்ல அனுபவங்களை வழங்குகிறது. மக்களின் நேரடி பார்வையில் என் கலை திறமையை வெளிப்படுத்துவதில் நான் ஒருபோதும் தயங்கியதில்லை. சமீபத்தில் கூட மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் பக்தர்கள் முன்னிலையில் பரதநாட்டியம் ஆடி மகிழ்ந்தேன். பெரிய மேடைகளில் நடனமாடுவதைக் காட்டிலும், மக்களின் நடுவில் நேரடியாக அவர்களின் பார்வையில் நடனமாடுவதை நான் அதிகமாக விரும்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
