‘லால் சலாம்’ திரைப்படத்திற்கு பிறகு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் புதிய திரைப்படம் ‘டெக்ஸ்லா’ ஆகும். இந்த படத்தை கண்ணன் ரவி குழுமம் சார்பில் தயாரிப்பாளர் கண்ணன் ரவி தயாரித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் நடிகர்கள் ஜெய், சுராஜ் வெஞ்சரமூடு, ஆனந்தராஜ், ஜி.எம். சுந்தர், ஜார்ஜ் மரியன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். ஒளிப்பதிவை விஷ்ணு ரங்கசாமி மேற்கொண்டு வருகிறார்.
இந்த திரைப்படத்தின் கதை குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. குறிப்பாக, இது ஒரு கிராமத்து விஞ்ஞானியை மையமாகக் கொண்ட கதை என கூறப்படுகிறது. 1881ஆம் ஆண்டில் மாற்று மின்னோட்டத்தின் கொள்கைகளை கண்டுபிடித்த செர்பிய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க மின் பொறியாளர் ‘டெஸ்லா’ என்பவரின் பெயரிலிருந்து இந்த தலைப்பு ஈர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அந்த விஞ்ஞானியின் பெயரில் வரும் ‘S’ என்ற எழுத்திற்குப் பதிலாக ‘X’ என்ற எழுத்தை பயன்படுத்தி ‘டெக்ஸ்லா’ என்று பெயரிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.மேலும், ஒரு கிராமத்தில் வாழும் மனிதர் விஞ்ஞானியாக வர வேண்டும் என்ற கனவை கொண்டிருப்பதை மையமாகக் கொண்டு இந்த கதை அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. அந்த கிராமத்து விஞ்ஞானி கதாபாத்திரத்தில் நடிகர் சுராஜ் வெஞ்சரமூடு நடித்துள்ளாராம். அவருடைய மகன் கதாபாத்திரத்தில் நடிகர் ஜெய் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
