1996ஆம் ஆண்டு வெளியான இந்தி திரைப்படமான ‘துஷ்மன் துனியா கா’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் லைலா. அந்த திரைப்படத்திலிருந்து தொடங்கி இன்று வரை திரைத்துறையில் தொடர்ந்து பயணம் செய்து வருகிறார். சினிமாவில் அறிமுகமாகி தற்போது 30 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள லைலா, இன்னும் தனது நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்.
சமீபத்தில் நடிகர் சூர்யாவுடன் அவர் நடித்த 2002ஆம் ஆண்டு வெளியான ‘மவுனம் பேசியதே’ திரைப்படம் மீண்டும் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. அந்த படத்தை பழைய ரசிகர்களுடன் சேர்ந்து இளம் தலைமுறையும் ஆர்வத்துடன் பார்த்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தனது சினிமா பயணம் குறித்து நடிகை லைலா சில கருத்துகளை பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறுகையில், “நான் சாதனைகளை எண்ணிக்கையில் வைத்துக் கொள்வது கிடையாது. நல்ல கதாபாத்திரங்களில் நடிப்பதே எனது ஒரே இலக்காக உள்ளது. இதுவரை எனது சினிமா பயணம் மிகவும் அழகான அனுபவமாக இருந்துள்ளது. ஒவ்வொரு திரைப்படமும் எனக்கு ஒரு புதிய அனுபவத்தை கொடுத்தது” என்று தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், பெண் நடிகைகளுக்கு ஆண் நடிகர்களைப் போல அதிக வாய்ப்புகள் கிடைப்பதில்லை கடினமாக உள்ளது. இருப்பினும் தற்போது அந்த நிலைமை கொஞ்சம் மேம்பட்டு வருகிறது. எதிர்காலத்தில் பெண்களை மையமாகக் கொண்ட ஒரு நல்ல வெப் சீரிஸில் நடிக்க வேண்டும் என்பது என் விருப்பமாக உள்ளது” என்று கூறினார்.
அதோடு ‘மவுனம் பேசியதே’ திரைப்படம் மீண்டும் வெளியானது குறித்து பேசும்போது, “அந்த படம் புதிதாக ரிலீஸ் செய்யப்பட்டதுபோலவே இருந்தது. இளம் தலைமுறையினர் அதை நல்ல முறையில் ஏற்றுக்கொண்டது எனக்கு மிகவும் மகிழ்ச்சியை அளித்தது. அந்த திரைப்படத்தை இப்போது பார்க்கும்போதும் அது பழைய படம் போல எனக்கே தோன்றவில்லை. அதன் கதை மற்றும் பின்னணி இன்றைய காலத்திற்கும் பொருந்தும் வகையில் உள்ளது. இயக்குநர் அமீர் அந்த படத்தை மிகவும் எதிர்கால சிந்தனையுடன் உருவாக்கியிருந்தார் என்று நான் நினைக்கிறேன்” என்று லைலா தெரிவித்துள்ளார்.
