தமிழ் திரையுலகில் இளம் இசையமைப்பாளராக வலம் வருபவர் சாய் அபயங்கர். தற்போது அவர் ‘பவழமல்லி’ என்ற புதிய இசை ஆல்பத்தை உருவாக்கியுள்ளார். இந்த ஆல்பத்தை திங்க் மியூசிக் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த ஆல்பத்தின் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் பேசிய சாய் அபயங்கர், “நான் முதலில் 45 வினாடிகள் மட்டுமே ஸ்கிராட்ச் இசையை இசைத்துக் காட்டினேன். ஆனால் அதை கேட்ட மகேஷ் உடனடியாக அதனை ‘பவழமல்லி’ ஆல்பமாக உருவாக்க முடிவு செய்து விட்டார்” என்று கூறினார்.
மேலும் தனது வரவிருக்கும் படைப்புகள் குறித்து பேசும்போது, தனது இசையில் உருவாகியுள்ள ‘கருப்பு’ திரைப்படம் உலகளவில் ஏப்ரல் மாதத்தில் வெளியாக தயாராகி வருகிறது என்றும் தெரிவித்தார். அதேபோல் நடிகர் தனுஷின் 55வது திரைப்படத்திற்கான முன்னேற்பாட்டு பணிகளும் நடைபெற்று வருவதாக கூறினார்.
மேலும் நடிகர் அல்லு அர்ஜூன் மற்றும் இயக்குநர் அட்லீ இணையும் புதிய திரைப்படத்திற்கும் தாம் இசையமைத்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார். தாம் நடிக்கப் போவதாக சிலர் கூறி வருவதாகவும், ஆனால் இன்று இங்கு கூடியிருக்கும் அனைவரும் தனது இசைக்காகவே வந்துள்ளனர் என்பதுதான் தமக்கு மிகவும் அர்த்தமுள்ளதாக உள்ளது என்றும் கூறினார்.தொடர்ந்து இசையில் கவனம் செலுத்தி நல்ல இசையை வழங்குவேன் என்றார்.
மேலும், இன்றைய காலத்தில் கலைஞர்கள் தங்களது திறமையை வெளிப்படுத்த பல தளங்கள் உள்ளன. ஆனால் அதே சமயம் அனைவரும் மேலும் கடினமாக உழைக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். தனது பெற்றோர்கள் தொடர்ந்து தன்னை ஊக்கப்படுத்தியதற்கும், தன்னுடைய வழிகாட்டிகள் தன்னை வழிநடத்தியதற்கும் நன்றி தெரிவித்தார். மேலும் அனைத்து இசை ஸ்ட்ரீமிங் தளங்களுக்கும் அவர்களது ஆதரவுக்காக நன்றி தெரிவித்தார்.
