தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க இயக்குநர்களில் ஒருவராக திகழ்கிறார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இவர் 2012 ஆம் ஆண்டு வெளியான ‘3’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து ‘வை ராஜா வை’ மற்றும் ‘லால் சலாம்’ ஆகிய படங்களை இயக்கினார். ஆனால் அந்த இரண்டு படங்களும் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை பெறவில்லை.
இந்நிலையில் தற்போது தயாரிப்பாளர் கண்ணன் ரவி தயாரிப்பில் உருவாகும் புதிய திரைப்படத்தை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி வருகிறார். ‘டெக்ஸ்லா’ என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தது.
இந்நிலையில் ‘டெக்ஸ்லா’ திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் ஜெய் மற்றும் சூரஜ் வெஞ்சரமூடு ஆகியோர் நடிக்க உள்ளனர். பூஜை விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றன.
