‘முண்டாசுபட்டி’ திரைப்படத்தின் மூலம் காமெடி நடிகராக அறிமுகமான முனீஷ்காந்த், அதன் பின்னர் பல்வேறு படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்துத் தனது தனித்துவமான நடிப்பால் கவனம் பெற்றார். ‘மிடில் கிளாஸ்’ திரைப்படத்தில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள ‘வடம்’ திரைப்படத்தில் முனீஷ்காந்த் நெகட்டிவ் ஷேட் கொண்ட முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தாம் சினிமாவுக்கு வந்ததே வில்லனாக நடிக்க வேண்டும் என்ற ஆசையோடு தான் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது, “சினிமாவுக்கு வந்து 12 ஆண்டுகள் ஆகிவிட்டது. ‘முண்டாசுபட்டி’ படத்தில் வில்லன் கதாபாத்திரத்திற்காகத்தான் ஆடிஷனுக்கு சென்றேன். ஆனால் அந்த படத்தின் இயக்குநர் என்னை காமெடி நடிகராக மாற்றினார். என்னைப் பார்த்து யார் சிரிப்பார்கள் என்று நான் கேட்டபோது, உங்களை சிரிக்க வைப்பேன் என்று அவர் நம்பிக்கை கொடுத்தார். அப்போது தான் ஒரு இயக்குநர் நினைத்தால் ஒரு நடிகரை எந்த விதமான பாத்திரத்திலும் மாற்ற முடியும் என்பதை புரிந்துகொண்டேன். அதனால் இயக்குநர் சொல்லும் கதாபாத்திரங்களை முழுமையாக ஏற்று நடிக்க வேண்டும் என்று முடிவு செய்தேன்,” என்றார்.
மேலும் அவர் கூறுகையில், ‘தாய்கிழவி’ திரைப்படம் என் கேரியரில் மிகவும் முக்கியமான படம். அந்த படத்திற்கு பிறகுதான் என்னை ஒரு முழுமையான நடிகராக உணர்ந்தேன். இருந்தாலும் சினிமாவுக்கு வந்ததே வில்லனாக நடிக்க வேண்டும் என்ற ஆசையோடு தான். ‘புரூஸ் லீ’ படத்தில் காமெடி கலந்த வில்லனாக நடித்தேன். அது நல்ல வரவேற்பைப் பெற்றது. இருப்பினும் ஒருநாள் முழுமையான வில்லனாக நடிக்க வேண்டும் என்ற ஆசை இன்னும் உள்ளதே,” என்று தெரிவித்துள்ளார்.
