நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் “கருப்பு.” இந்த திரைப்படத்தின் வெளியீட்டு தேதி பலமுறை மாற்றப்பட்டுள்ள நிலையில், தற்போது வரை இந்த படத்தின் இறுதி ரிலீஸ் தேதி குறித்து எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகாமல் உள்ளது. இதனால் ரசிகர்களிடையே படத்தின் வெளியீட்டை பற்றிய எதிர்பார்ப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் கருப்பு திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக நடிகை திரிஷா நடித்துள்ளார். மேலும் நடிகர்கள் சுவாசிகா, இந்திரன்ஸ், யோகி பாபு, ஷிவாதா, சுப்ரீத் ரெட்டி, அனகா மாயா ரவி மற்றும் நட்டி நட்ராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் ஒரு நீதிமன்ற வழக்கை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் அந்த கதையுடன் கடவுள் நம்பிக்கை சார்ந்த அம்சங்களையும் இணைத்து உருவாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் படம் ரசிகர்களிடையே ஒரு தனித்துவமான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், கருப்பு திரைப்படத்தின் பின்னணி பணிகள் நடைபெறும் போது இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜிக்கும் தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபுவுக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஆர்.ஜே. பாலாஜி இந்த படத்திலிருந்து விலகியதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவின. மேலும் படத்தின் பின்னணி பணிகளை விரைவில் முடித்து வெளியீட்டிற்கு கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த பதிவுகளில் குறிப்பிடப்பட்டது. இந்த தகவலுக்கு பதிலளித்த தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு, “டேய் சும்மா இருடா” என்று எஸ்.ஜே. சூர்யாவின் பிரபல மீம் ஒன்றை நகைச்சுவையாக பகிர்ந்து பதிலளித்துள்ளார்.
