‘தாய் கிழவி’ திரைப்படம் வெளியான முதல் மூன்று நாட்களிலேயே ரூ.22 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதிக எதிர்பார்ப்புடன் திரையரங்குகளில் வெளியான இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. விமர்சகர்களும் பொதுமக்களும் பாராட்டி வரும் நிலையில், வசூல் ரீதியிலும் படம் வெற்றிப் பாதையில் பயணிக்கிறது.
படத்தை பார்த்த பல பிரபலங்களும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் சிவகுமார், ‘தாய் கிழவி’ படத்தை பார்த்துவிட்டு நடிகை ராதிகாவை நேரில் சந்தித்து வாழ்த்தியுள்ளார். இதுகுறித்து ராதிகா சரத்குமார் தனது சமூக வலைத்தளப் பதிவில் நன்றியைத் தெரிவித்துள்ளார். “சிவகுமார் அண்ணா, நன்றி” என்று குறிப்பிட்டு, அவருடன் எடுத்த புகைப்படத்தையும், சிவகுமார் கைப்பட எழுதி வழங்கிய பாராட்டு குறிப்பையும் பகிர்ந்துள்ளார்.
சிவகுமார் தனது வாழ்த்து குறிப்பில், “நடிகவேள் எம்.ஆர். ராதாவுக்கு ‘ரத்தக் கண்ணீர்’; அவர் மகள் ராதிகாவுக்கு ‘தாய் கிழவி’. வாழ்த்துக்களுடன் சிவகுமார், சூர்யா, கார்த்தி, பிருந்தா குடும்பத்தினர்” என்று எழுதியுள்ளார். இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.
