தனிப்பட்ட வாழ்க்கை சம்பந்தமான விஷயங்களை அரசியலுடன் இணைத்து பேசுவது சரியான அணுகுமுறை அல்ல என்று பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகியும் நடிகையுமான குஷ்பு தெரிவித்துள்ளார். இன்று (பிப்ரவரி 28) சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.
அப்போது அவர் கூறுகையில், “ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கையை அரசியல் கோணத்தில் வைத்து மதிப்பிடக்கூடாது. ஒவ்வொருவரின் தனிப்பட்ட வாழ்விலும் பல்வேறு சிக்கல்கள் இருக்கக்கூடும். கணவன்-மனைவி இடையேயான பிரச்சினைகள் குறித்து வெளிப்படையாக பேசுவதற்கோ அல்லது அதைப் பற்றி கருத்து தெரிவிப்பதற்கோ மற்றவர்களுக்கு உரிமை இல்லை. அது முற்றிலும் அவர்களுக்குள் தீர்க்க வேண்டிய விஷயம்” என்று தெரிவித்தார்.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகருமான மற்றும் தவெக கட்சியின் தலைவருமான விஜய்க்கு எதிராக, அவரது மனைவி சங்கீதா செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து மனு தாக்கல் செய்துள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 27 ஆண்டுகள் நீண்ட திருமண வாழ்க்கைக்குப் பின்னர் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனு, சினிமா மற்றும் அரசியல் வட்டாரங்களில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. இந்த விவகாரம் குறித்து பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
