கடந்த 2001ஆம் ஆண்டு ராஜமவுலி இயக்கிய முதல் திரைப்படமான ‘ஸ்டூடண்ட் நம்பர் ஒன்’ தொடங்கி, அவர் இயக்கிய அனைத்து திரைப்படங்களுக்கும் தொடர்ந்து இசையமைத்து வருகிறார் எம்.எம். கீரவாணி. அந்த வரிசையில் ‘மகதீரா’, ‘ஈகா’, ‘பாகுபலி’, ‘பாகுபலி 2’, ‘ஆர்ஆர்ஆர்’ போன்ற பல பிரம்மாண்டமான திரைப்படங்களுக்கு அவர் இசையமைத்துள்ளார். தற்போது ராஜமவுலி இயக்கத்தில் உருவாகி வரும் ‘வாரணாசி’ திரைப்படத்திற்கும் எம்.எம். கீரவாணி இசையமைத்து வருகிறார்.
மகேஷ் பாபு கதாநாயகனாக நடித்துவரும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு இதுவரை சுமார் ஐம்பது சதவீதம் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில், இப்படத்தின் இசைப்பணிகள் குறித்து எம்.எம். கீரவாணியிடம் கேட்கப்பட்டபோது, இந்த திரைப்படத்தின் பாடல்களின் இசையமைப்பும் ஒலிப்பதிவும் ஏற்கனவே நிறைவடைந்துவிட்டதாக தெரிவித்தார்.
மேலும், பின்னணி இசைப்பணிகளை வருகிற செப்டம்பர் மாதம் முதல் தொடங்க உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இதன் மூலம் ‘வாரணாசி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதத்துடன் முழுமையாக நிறைவடையும் என்பது தெரியவந்துள்ளது. இதற்கிடையில், இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 7ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
