தமிழ்நாடு விளையாட்டு வீரர்கள் கடந்த ஐந்து ஆண்டுகளில் செய்த சாதனைகளையும் வெற்றிகளையும் பாராட்டும் விதமாக சென்னை நகரில் “சாம்பியன்ஸ் ஆப் தமிழ்நாடு” என்ற விழா சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாட்டின் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். மேலும் ஆர்யா, யோகி பாபு மற்றும் முன்னாள் கபடி வீரர் மணத்தி கணேசன் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பெருமளவில் பங்கேற்றனர்.
இந்த விழாவில் யோகி பாபு பேசுகையில், தனது இளம் வயதில் கால்பந்து விளையாடும் வாய்ப்பிற்காக நீண்ட நாட்கள் காத்திருந்த அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் அவரிடம், இப்போது கொஞ்சம் ஒல்லியாக இருக்கிறீர்கள்… சிக்ஸ் பேக் முயற்சி செய்கிறீர்களா? என்று நகைச்சுவையாக கேட்டார்.
இதற்கு பதிலளித்த யோகி பாபு, நாம் சிரிப்பை கொடுப்பவர்கள், நமக்கு எதற்கு சிக்ஸ் பேக்? கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி முன்னேற்றிக் கொண்டே போவோம். சில நேரங்களில் படப்பிடிப்பு தளத்தில் விளையாடுவோம், அதுவே போதும் என்று சிரித்தபடி கூறினார். தொடர்ந்து அவர், “சேப்பாக்கத்தில் கிரிக்கெட்டுக்காக முயற்சி செய்திருக்கிறேன். சென்னை சூப்பர் கிங்ஸ் போட்டி நடைபெற்றால் முதல் கருத்துரையாளராக செல்லத் தயார். மைதானத்தின் வெளியே நின்று பார்த்த அனுபவம் உண்டு. உழைப்பே அனைத்தும். பலருக்கும் நீங்கள் உதவி செய்து வருகிறீர்கள்; இன்னும் அதிகமாக செய்யுங்கள் என்று தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை அவர்களை பாராட்டினார்.
