நடிகர் விஜய்யின் கடைசி திரைப்படம் என அறிவிக்கப்பட்ட ‘ஜனநாயகன்’ திரைப்படம், பொங்கல் பண்டிகைக்கு வெளியாவதாக முதலில் அறிவிக்கப்பட்டது. அதன்படி, கடந்த ஜனவரி 9ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக இருந்தது. ஆனால், இந்த திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்க காலதாமதம் ஆனதால் கேவிஎன் புரொடக்ஷன்ஸ், படத்திற்கு சென்சார் சான்றிதழ் வழங்க உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கில் நீதிமன்ற தீர்ப்பு தயாரிப்பு நிறுவனத்திற்கு சாதகமாக அமையாததால், ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது. புதிய வெளியீட்டு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தயாரிப்பு நிறுவனம் தெரிவித்தது. இந்நிலையில் தற்போது படக்குழுவினர் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை மறு தணிக்கைக்காக மீண்டும் அனுப்பியுள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதில் சர்ச்சைக்குரியதாக கருதப்பட்ட சில காட்சிகள் நீக்கப்பட உள்ளதாகவும், இதனால் படத்தின் நீளம் சுமார் 20 நிமிடங்கள் வரை குறையும் என்றும் கூறப்படுகிறது. மேலும், மறு தணிக்கை செயல்முறைகள் முடிவடைந்து, 20 நாட்களுக்குள் படத்திற்கு சென்சார் சான்றிதழ் கிடைக்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சூழ்நிலையில், ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் சென்சார் தொடர்பான வழக்கை தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்திலிருந்து வாபஸ் பெற்றுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சென்சார் போர்டின் மறு தணிக்கை குழுவை அணுகியுள்ள காரணத்தால், வழக்கை தொடர வேண்டிய அவசியம் இல்லை என்று குறிப்பிட்டு, சென்னை உயர் நீதிமன்ற பதிவுத்துறைக்கு தயாரிப்பு நிறுவனம் கடிதம் அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது.
