இயக்குநர் எம்.ஆர். பாரதி எழுதி இயக்கியுள்ள ‘ட்ரீம் கேர்ள்’ திரைப்படம், காதலர் தினமான பிப்ரவரி 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தில் நாயகனாக ஜீவாவும், நாயகியாக ஹரிஷ்மிதாவும் நடித்துள்ளனர். காதல் கதையை மையமாக கொண்டு உருவாகியுள்ள இப்படம், இளம் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தயாராகியுள்ளது.
‘ட்ரீம் கேர்ள்’ திரைப்படம் வெறும் 20 நாட்களிலேயே, ரூ.7 லட்சத்திற்கும் குறைவான பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ளதாக இயக்குநர் எம்.ஆர். பாரதி தெரிவித்துள்ளார். குறைந்த செலவில், நேர்மையான கதையுடன் ஒரு முழுநீள திரைப்படத்தை உருவாக்கியிருப்பது படக்குழுவின் முயற்சியாக பார்க்கப்படுகிறது.
சினிமா இயக்குநராக வேண்டும் என்ற கனவுடன் வாழும் நாயகனுக்கும், பாடகியாக உருவாக வேண்டும் என்ற இலக்குடன் பயணிக்கும் நாயகிக்கும் இடையிலான காதலை இந்த படம் எடுத்துக்காட்டுகிறது. குறிப்பிடத்தக்க வகையில், இப்படத்தில் வில்லன் கதாபாத்திரமே இல்லை. கதாநாயகனும் கதாநாயகியும் தங்களது கனவுகளைத் துரத்தி செல்லும் வாழ்க்கை பயணமே கதையின் மையமாக அமைந்துள்ளது. மேலும், இந்தப் படத்தின் முழு படப்பிடிப்பும் ஊட்டியில் நடைபெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
