2007ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான ‘பொல்லாதவன்’ திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் கிஷோர். இந்தப் படத்தைத் தொடர்ந்து ‘ஜெயம் கொண்டான்’, ‘வெண்ணிலா கபடிக்குழு’, ‘விடுதலை’, ‘வேட்டையன்’, ‘பொன்னியின் செல்வன்’ உள்ளிட்ட பல முக்கியமான திரைப்படங்களில் நடித்ததன் மூலம் அவர் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கிக் கொண்டார்.
இதனைத் தொடர்ந்து தற்போது இயக்குநர் தீரவ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மெல்லிசை’ திரைப்படத்தில் நடிகர் கிஷோர் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்தப் படத்தை ‘வெப்பம் குளிர் மழை’ திரைப்படத்தை தயாரித்த ஹேஷ்டேக் எப்டிஎப்எஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தில் தனன்யா, சுபத்ரா ராபர்ட், ஜார்ஜ் மரியன், ஹரிஷ் உத்தமன், ஜஸ்வந்த் மண்டன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
பல திரைப்படங்களில் வில்லனாகவும், குணசித்திர கதாபாத்திரங்களிலும் நடித்துவரும் நடிகர் கிஷோர், சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில், வாழ்க்கையில் பின்னால் செல்வதற்கான வாய்ப்பு இருந்தால், நான் 2014ஆம் ஆண்டுக்குச் சென்று பிரதமரை மாற்றியிருப்பேன். அப்படி நடந்திருந்தால் இந்தியாவே வேறுபட்டதாக மாறியிருக்கும். இப்போது நாடு ஆபத்தான சூழ்நிலையில் உள்ளது. வெறுப்புணர்வு நாட்டில் அதிகரித்துள்ளது. இப்படியே சென்றால் இதை மாற்றுவதற்கு பல ஆண்டுகள் தேவைப்படும். வெறுப்பை முதலீடாக வைத்து ஆட்சிக்கு வருபவர்கள் மிகவும் ஆபத்தானவர்கள். அன்பு இல்லையென்றால் இங்கே எதுவுமே நிலைத்திருக்காது என்று தெரிவித்துள்ளார்.
