லெஜண்ட் சரவணன் நடிக்கும் புதிய திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் போது, லெஜண்ட் சரவணன் நடிக்கும் இந்த படத்திற்கு ‘லீடர்’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
டீசர் வெளியீட்டு நிகழ்ச்சியில் பேசிய லெஜண்ட் சரவணன், சிறுவயது முதலே எனக்கு சினிமா மீது மிகுந்த ஆர்வம் இருந்தது. என் ஃபிரிட்ஜின் இருபுறங்களிலும் ஷாருக்கான் மற்றும் சல்மான் கான் ஆகியோரின் புகைப்படங்களை ஒட்டியிருப்பேன். ஒருநாள் நானும் அவர்களைப் போல ஆக வேண்டும் என்று என் அம்மாவிடம் சொல்லுவேன். ஆனால், சூழ்நிலை காரணமாக, என் தந்தையின் தொழிலை கவனிப்பது என் பொறுப்பாக மாறியது என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் பேசுகையில், ஜவுளித் தொழிலாக இருந்தாலும், சினிமாவாக இருந்தாலும், நான் முதல் ஆளாக வந்து கடைசி ஆளாக செல்வேன். எந்த வேலையையும் முழு அர்ப்பணிப்புடன் செய்வேன். ‘லீடர்’ என்ற தலைப்பைக் கேட்டதும், இது ஒரு அரசியல் படம் என்று பலர் நினைக்கலாம். ஆனால் இது முழுமையான ஒரு பொழுதுபோக்குத் திரைப்படம். ஒரு அப்பாவி தந்தையும் மகளும் அமைதியாக வாழும் வாழ்க்கையில், ஒரு கும்பல் தலையிடுகிறது என்பதே இதன் மையக் கதை. தொடக்கம் முதல் முடிவு வரை, இயக்குநர் துரை செந்தில்குமார் தனது திரைக்கதையால் இந்த படத்தை சிறப்பாக வடிவமைத்துள்ளார். இந்த திரைக்கதை இன்றைய தலைமுறைக்கு மிகவும் பொருத்தமானதாக இருக்கும்” என்று அவர் கூறினார்.
