‘அமரன்’ திரைப்படத்திற்குப் பிறகு, இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி தற்போது நடிகர் தனுஷின் 55வது திரைப்படத்தை இயக்குகிறார். இந்த படத்தை தனுஷின் சொந்த தயாரிப்பு நிறுவனமான வுண்டர்பார் பிலிம்ஸும், பாலிவுட்டைச் சேர்ந்த ஆர் டேக் ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்து வருகின்றன. கடந்த சில நாட்களாக இந்த படத்தைப் பற்றிய அப்டேட்களை படக்குழு தொடர்ந்து வெளியிட்டு ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்து வருகிறது. இந்த படத்திற்கு இசையமைப்பாளராக சாய் அபயங்கர் இணைந்துள்ளதாக முதலில் அறிவிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, கதாநாயகியாக நடிக்க ஸ்ரீலீலா இந்த படத்தில் இணைந்துள்ளதாக அறிவிப்பு வெளியானது. தற்போது, இந்த படத்தில் இன்னொரு முக்கியமான பெண் கதாபாத்திரத்தில் நடிகை சாய் பல்லவி இணைந்துள்ளார் என்ற தகவலையும் படக்குழு அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.
‘மாரி 2’ திரைப்படத்திற்குப் பிறகு, நடிகர் தனுஷ் மற்றும் சாய் பல்லவி மீண்டும் ஜோடியாக இணைந்துள்ளனர். இவர்களின் கூட்டணியில் வெளியான ‘ரவுடி பேபி’ பாடல் உலகளவில் 1727 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்லாமல், ‘அமரன்’ படத்திற்கு பிறகு, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சாய் பல்லவி மீண்டும் நடிக்கவுள்ளார் என்பதும் இந்த படத்தின் மீது கூடுதல் கவனத்தை ஏற்படுத்தியுள்ளது.
