கமல்ஹாசனுடன் ‘இந்தியன்-2’, சிவகார்த்திகேயனுடன் ‘அயலான்’ உள்ளிட்ட படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடம்பிடித்தவர் நடிகை ரகுல் பிரீத்சிங். தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த ரகுல் பிரீத்சிங், அதன் பின்னர் பாலிவுட் திரையுலகில் அறிமுகமாகி அங்கும் படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் ஜாக்கி பக்னானியை திருமணம் செய்து கொண்ட அவர், பாலிவுட் திரையுலகில் காலடி எடுத்து வைத்த ஆரம்ப காலத்தில் சந்தித்த அவமானங்கள் குறித்து அளித்த பேட்டியில் மனம் திறந்து பேசியுள்ளார்.
அவர் கூறுகையில், “தெலுங்கு சினிமாவில் நான் ஒரு பெரிய நடிகையாக இருந்த போதிலும், பாலிவுட்டில் அறிமுகமான போது என்னை ஒரு புதிய நடிகையாகத்தான் பார்த்தார்கள். அனைத்தையும் பூஜ்யத்திலிருந்து தொடங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. வெளியாட்கள் என்பதால் சிவப்பு கம்பள வரவேற்புகள் எதுவும் கிடைக்காது. நடிகர்கள், இயக்குநர்களுக்கு தொலைபேசியில் அழைத்தாலும் பலர் எடுக்க மாட்டார்கள். எடுத்தாலும் பெரும்பாலும் அலட்சியமான பதில்களே கிடைக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் பேசுகையில், “ஒரு திரைப்படத்தின் ஆடிஷனுக்காக ஒரு அலுவலகத்தில் மணிக்கணக்கில் காத்திருந்த அனுபவமும் எனக்கு உள்ளது. அந்த நேரங்களில் ஏற்பட்ட ஏமாற்றங்களும், அவமானங்களும் எனக்கு மன உறுதியை வளர்த்துக் கொடுத்தன” என்று கூறினார். ரகுல் பிரீத்சிங்கின் இந்த பேச்சு தற்போது ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளது.
