நடிகை ஸ்ரேயா, தமிழில் ரஜினிகாந்த், விஜய், விக்ரம் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே தனித்துவமான இடத்தை பிடித்தவர். தமிழில் மட்டுமல்லாமல், தெலுங்கு திரையுலகிலும் அதே அளவிற்கு வரவேற்பைப் பெற்று, ஒரு காலகட்டம் வரை முன்னணி நடிகையாக வலம் வந்தார். பின்னர் 2018 ஆம் ஆண்டு ஆன்ட்ரூ கோஸ்சீவ் என்பவரை திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் அடியெடுத்து வைத்தார். அதன் பிறகு, தேர்ந்தெடுத்த படங்களில் மட்டும் நடித்து, வருடத்திற்கு ஒன்று அல்லது இரண்டு படங்களிலாவது தொடர்ந்து நடித்து வருகிறார்.
தற்போது, ஹிந்தியில் உருவாகி வரும் ‘திரிஷ்யம் 3’ திரைப்படத்தில் ஸ்ரேயா நடித்து வருகிறார். இந்த நிலையில், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், தனது குழந்தைகளுக்காக அவர் எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார் என்பது குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். அதில் அவர் கூறியதாவது, “ஒரு நடிகையாக இருந்தாலும், ஒரு குழந்தைக்கு தாய் என்ற அடையாளத்தை நான் ஒருபோதும் மறக்க முடியாது. ஒரு முறை என் மகளின் பள்ளியில் ஸ்போர்ட்ஸ் டே விழா நடைபெறுவதாக கூறி, அந்த நிகழ்ச்சியில் நான் கண்டிப்பாக கலந்து கொள்ள வேண்டும் என்று அவள் கேட்டாள்.
அதே நாளில் எனக்கு படப்பிடிப்பு இருந்தாலும், கிடைத்த இரண்டு மணி நேர இடைவெளியில், என் கதாபாத்திரத்தின் மேக்கப்பை கூட கலைக்காமல், அதே கெட்டப்பில் பள்ளிக்கூடத்திற்கு சென்று அந்த விழாவில் கலந்து கொண்டேன். அந்த படத்தில் நான் மிகவும் சீரியஸான கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருந்ததால், என்னை பார்த்த பலர் ஏன் இவ்வளவு சீரியஸாக இருக்கிறீர்கள் என்று கூட கேட்டார்கள். அவர்களுக்கு என்ன சொல்வது? இப்படித்தான் சில நேரங்களில் சில்லித்தனமாக இருந்தாலும், குழந்தைகளுக்காக சில விஷயங்களை செய்ய மனம் தோன்றுகிறது” என்று ஸ்ரேயா தெரிவித்துள்ளார்.
