நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதியருக்கு இரட்டை குழந்தைகள் உள்ளனர். தங்களின் செல்ல மகன்களுக்கு உயிர் மற்றும் உலக் என பெயர் வைத்துள்ள இந்த ஜோடி, அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் தங்கள் குழந்தைகளுடன் விளையாடும் வீடியோக்களை பகிர்ந்து வருகின்றனர். அந்த வீடியோக்கள் ரசிகர்களிடையே அதிக கவனம் பெறுவதுடன், சமூக வலைத்தளங்களில் வைரலாகவும் பரவி வருகின்றன.
இந்த நிலையில், நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தங்கள் குழந்தைகளுடன் துபாய் விமான நிலையத்தில் பயணிக்கும் காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. துபாய் விமான நிலையத்தில் அவர்கள் வலைப்பேச்சு குழுவினரை தற்செயலாக சந்தித்ததாகவும் கூறப்படுகிறது.
அந்த நேரத்தில், அந்தணன் மற்றும் பிஸ்மி ஆகியோருக்கு, உயிர் மற்றும் உலக் “ஹாய்” சொல்லும்படி விக்னேஷ் சிவன் கேட்டுக்கொண்டுள்ளார். நயன்தாராவுடன் இருந்த உலக் “வணக்கம்” என்று தமிழில் சொல்வதை கேட்ட வலைப்பேச்சு குழுவினர் ஆச்சரியமடைந்து, “தமிழ் நல்லா சொல்லிக் கொடுத்திருக்கீங்களே” என்று கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த நயன்தாரா, “வீட்டிலேயும் தமிழில்தான் பேசுவாங்க” என்று கூறினார். இந்த நெகிழ்ச்சியான தருணங்கள் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து வைரலாகி வருகின்றன.
