நடிகை தமன்னா, தனது 20 வயதில் ஏற்பட்ட ஒரு மனதை பாதித்த கசப்பான அனுபவத்தைப் பற்றி சமீபத்தில் அளித்த ஒரு நேர்காணலில் வெளிப்படையாக பகிர்ந்துள்ளார். அந்த அனுபவம், அவரது வாழ்க்கையிலும் திரையுலக பயணத்திலும் முக்கியமான ஒரு பாடமாக அமைந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
ஒரு திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது, நெருக்கமான காட்சியில் நடிக்க இயக்குநர் தன்னை வற்புறுத்தியதாக தமன்னா கூறினார். அந்தக் காட்சியில் நடிப்பது தனக்கு மிகுந்த மனஅசவுகரியத்தை ஏற்படுத்தியதாகவும், அதனை இயக்குநரிடம் நேரடியாகத் தெரிவித்ததாகவும் அவர் கூறினார். ஆனால் அதற்கு பதிலாக, அனைவரின் முன்னிலையில் “கதாநாயகியை மாற்றுங்கள்” என்று இயக்குநர் கூறியதாக தமன்னா தெரிவித்தார்.
அந்தக் காட்சிக்காக இயக்குநர் தன்னிடம் கடும் அழுத்தம் கொடுத்ததாகவும், இருந்தபோதும் மனம் தளராமல் உறுதியாக நின்றதாகவும் தமன்னா கூறினார். அந்தச் சூழ்நிலை, என்ன நடந்தாலும் அதை எதிர்கொள்ளும் தைரியத்தை தனக்கு வழங்கியதாகவும் அவர் குறிப்பிட்டார். இறுதியில், அந்த இயக்குநர் தன்னிடம் மன்னிப்பு கேட்டதாகவும் அவர் தெரிவித்தார். இருப்பினும், அந்த படம் எது, அந்த இயக்குநர் யார் என்பதற்கான விவரங்களை தமன்னா வெளியிடவில்லை. இதனால் ரசிகர்கள் மற்றும் திரையுலக வட்டாரத்தில் அந்த படம் குறித்த பல்வேறு ஊகங்கள் பரவி வருகின்றன.
