மலையாள திரையுலகில் கடந்த 2013ஆம் ஆண்டு மோகன்லால் நடிப்பில், இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘திரிஷ்யம்’. இந்த படம் வெளியான உடனே மாபெரும் வெற்றியை பெற்றது. இதனைத் தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகம் 2021ஆம் ஆண்டு நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியானது. முதல் பாகத்திற்கு எந்த வகையிலும் குறையாத வரவேற்பை இந்த இரண்டாம் பாகமும் பெற்றது.
மலையாள மொழியை தாண்டி, தென்னிந்திய மொழிகள் மட்டுமின்றி ஹிந்தி மொழியிலும் ‘திரிஷ்யம்’ திரைப்படத்திற்கு மிகப்பெரிய ரசிகர் வட்டம் உருவானது. இதன் காரணமாக, இந்த இரண்டு பாகங்களும் தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டன.
இந்த நிலையில், ‘திரிஷ்யம் 3’ திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. அதற்கு ஏற்ப, கடந்த சில மாதங்களுக்கு முன்பு மலையாளத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கி, தற்போது முழுமையாக நிறைவடைந்துள்ளது. தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் படம் குறித்து பேசிய இயக்குனர் ஜீத்து ஜோசப், கோடை விடுமுறையை குறிவைத்து இப்படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளதாக தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இந்த படத்தின் கதாநாயகன் மோகன்லால், ‘திரிஷ்யம் 3’ திரைப்படம் வரும் ஏப்ரல் 2ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இதேபோல், ஹிந்தியில் அஜய் தேவ்கன் நடிப்பில் உருவாகி வரும் ‘திரிஷ்யம் 3’ திரைப்படம் வரும் அக்டோபர் 2ஆம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
