நடிகர் விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ திரைப்படம், பொங்கலை முன்னிட்டு வெளியாகும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இதுவரை சில காரணங்களால் தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்படவில்லை. இதுதொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், தணிக்கைச் சான்றிதழ் தொடர்பான தீர்ப்பு நாளை (9-ஆம் தேதி) வழங்கப்படும் என தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, ஜனவரி 9-ஆம் தேதி ‘ஜனநாயகன்’ திரைப்படம் வெளியாகாது என தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதற்கிடையில், அரசியல் தலைவர்கள் மற்றும் திரைத்துறையைச் சேர்ந்த பலரும் படத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
•இயக்குனர் வெங்கட் பிரபு வெளியிட்டுள்ள பதிவில், “எதுவாக இருந்தாலும் பரவாயில்லை. இந்திய சினிமாவிலேயே மிக மிக பெரிய பேர்வெலாவாக இது இருக்கப் போகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.
•இயக்குனர் ரத்னகுமார் வெளியிட்டுள்ள பதிவில், “கடந்த சில மாதங்களாக பெரிய படங்கள் தொடர்ந்து ஒத்திவைக்கப்படுவதைப் பார்ப்பது வேதனையாக உள்ளது. தமிழ் திரையுலகம் பெரும் ஆபத்தில் இருக்கிறது. மன உறுதியுடன் இருங்கள் விஜய் சார் மற்றும் ‘ஜனநாயகன்’ படக்குழுவினரே. கோவிட் காலங்களில் நீங்கள் தான் தமிழ் சினிமாவை மீட்டெடுத்தீர்கள். கடைசி முறையாகவும் நீங்கள் அதைச் செய்வீர்கள் என்று எங்களுக்குத் தெரியும். படம் எப்போது வெளியாகிறதோ, அன்றுதான் உண்மையான திருவிழா” என்று தெரிவித்துள்ளார்.
•இயக்குனர் அஜய் ஞானமுத்து வெளியிட்டுள்ள பதிவில், “இது அதிகாரத்தின் அப்பட்டமான துஷ்பிரயோகம். ஒரு திரைப்படம் ஒருவரை மட்டும் சார்ந்தது அல்ல. ஒரு படம் திரைக்கு வர நூற்றுக்கணக்கான மக்களின் உழைப்பும் பணமும் இதில் அடங்கியுள்ளது. படக்குழுவினருக்கு எனது முழு ஆதரவு. இது தளபதியின் படம், அவருடைய கடைசிப் படம். அது எப்போது வெளியானாலும், முன்னெப்போதும் இல்லாத வகையில் அதை நாங்கள் கொண்டாடுவோம்” என்று தெரிவித்துள்ளார்.
•நடிகை சனம் ஷெட்டி வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், இது அநியாயத்தின் உச்சக்கட்டம். ஆனால் நீங்கள் எவ்வளவு தடைகள் போட்டாலும், விஜய் இன்னும் உயர்ந்து கொண்டே போவார். நாங்கள் கை விட்டுவிட மாட்டோம். பொங்கல் அன்று படம் வரவில்லை என்றால் என்ன? படம் வெளியாகும் நாள்தான் எங்களுக்குப் பொங்கல். ‘ஜனநாயகன்’ ஏற்கனவே வேற லெவல் பிளாக்பஸ்டர். காத்திருங்கள், காத்திருக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
•நடிகர் ரவிமோகன் வெளியிட்டுள்ள பதிவில், “ஒரு தம்பியாக, உங்களுக்குத் துணையாக நிற்கும் கோடிக்கணக்கானவர்களில் ஒருவனாக நானும் உங்களுடன் நிற்கிறேன். உங்களுக்கு ஒரு தேதி தேவையில்லை. நீங்கள்தான் தொடக்கம். அந்த தேதி எப்போது வந்தாலும், பொங்கல் அப்போதுதான் ஆரம்பமாகும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
•இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் வெளியிட்டுள்ள பதிவில், “சினிமா இன்று கடினமான காலகட்டத்தில் உள்ளது. குறைந்த பட்ஜெட் சுயாதீனப் படங்களுக்கு திரையரங்குகள் இல்லை. பெரிய பட்ஜெட் படங்கள் தணிக்கைச் சான்றிதழ் தாமதத்தால் ஒத்திவைக்கப்படுகின்றன. தணிக்கை தொடர்பான காலக்கெடு விதிகள் சீரமைக்கப்பட வேண்டும். சினிமாவை காப்பாற்ற அனைவரும் ஒன்றிணைய வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
•நடிகர் சிபி சத்யராஜ் வெளியிட்டுள்ள பதிவில், “ஜனநாயகன் வெளியீட்டைச் சுற்றி நடைபெறும் நிகழ்வுகள் அனைத்தும் மிகப்பெரிய வெற்றிக்கான சரியான மேடையை அமைத்து தருகின்றன. நம்பிக்கையுடன் இருங்கள். நல்லதே நடக்கும். வெற்றி நிச்சயம்” என்று தெரிவித்துள்ளார்.
•இயக்குனர் அமீர், ஒரு திரைப்படத்தை வெளியிட விடாமல் தடுத்தால், படக்குழுவினரை தன் வழிக்குக் கொண்டு வந்துவிடலாம் என்ற எண்ணம் மிகக் கேவலமானது. தமிழ்நாட்டில் அதிகாரத்தை யார் கையில் கொடுக்க வேண்டும் என்பதை மக்கள் தான் முடிவு செய்வார்கள், அயோக்கிய அரசியல்வாதிகள் அல்ல” என்று கூறியுள்ளார்.
•நடிகர் சிலம்பரசன் வெளியிட்டுள்ள பதிவில், அன்புள்ள விஜய் அண்ணா, பின்னடைவுகள் எப்போதும் உங்களைத் தடுத்ததில்லை. இதைவிட பெரிய புயல்களைத் தாண்டி வந்திருக்கிறீர்கள். இதுவும் கடந்து போகும். ‘ஜனநாயகன்’ வெளியாகும் அன்றே உண்மையான திருவிழா தொடங்கும் என்றுள்ளார்.
• நடிகர் ஜீவா: காத்திருப்பு நீளமாகும்போது, தாக்கம் பெரிதாகிறது. இன்றும், ஒவ்வொரு நாளும் எப்போதும் உங்களுடன் தான் தளபதி விஜய் அண்ணா. நீங்கள் உண்மையிலேயே எங்கள் ஜனங்களின் நாயகன் நாங்கள் வருகிறோம் – தாமதமாகிவிட்டது, ஆனால் தோற்கடிக்கப்படவில்லை என கூறியுள்ளார்.
• ஹரிஷ் கல்யாண்: விஜய் சாரின் ரசிகராகவும், சினிமா காதலராகவும் ஜனநாயகனின் தாமதம் எனக்கு மிகவும் வேதனை அளிக்கிறது. ஆனால் கொண்டாட்டங்கள் மட்டும் தான் ஒத்திவைக்கப்படுகின்றன.காத்திருப்போம். #ஜனநாயகன் என்றுள்ளார்.
