சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் ‘பராசக்தி’. இந்தப் படத்தில் ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா, மற்றும் ராணா டகுபதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகியுள்ள இந்த திரைப்படம், வருகிற 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில், மலையாள திரையுலகின் பிரபல இயக்குநரும் நடிகருமான பாசில் ஜோசப் இந்த படத்தில் நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வந்தன. இதனை உறுதிப்படுத்தும் வகையில், ‘பராசக்தி’ திரைப்படத்தின் புரமோஷன் நிகழ்வுகளுக்காக கொச்சி சென்றிருந்த சிவகார்த்திகேயன், இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளார்.
இதுகுறித்து அவர் பேசுகையில், “எல்லோருக்கும் பிடித்தவரும், எனக்கும் மிகவும் பிடித்தவருமான பாசில் ஜோசப் இந்த படத்தில் ஒரு சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். இந்த ரகசியத்தை வெளிப்படுத்துவதற்கு முன்பே இயக்குநரிடம் அனுமதி பெற்றுவிட்டேன். இந்த படத்தின் படப்பிடிப்பு காலத்தில், பாசில் ஜோசப்புடன் தான் நான் அதிகமாக பேசினேன். இலங்கையில் அவரது படப்பிடிப்பு முடிந்த பிறகும், சில நாட்கள் அவர் அங்கேயே தங்கி இருந்தார். அந்த நாட்கள் முழுவதும் அவருடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிட்டோம்” என்று சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
