நடிகை அஞ்சலி தெலுங்கு திரைப்படமான ‘போட்டோ’ மூலம் திரையுலகில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து இயக்குநர் ராம் இயக்கிய ‘கற்றது தமிழ்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். தனது இயல்பான நடிப்பாலும், பல்வேறு கதாபாத்திரங்களை திறம்பட வெளிப்படுத்தும் திறமையாலும் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். ‘அங்காடி தெரு’, ‘எங்கேயும் எப்போதும்’, ‘கலகலப்பு’, ‘கீதாஞ்சலி’, ‘தரமணி’, ‘மத கஜ ராஜா’ உள்ளிட்ட பல வெற்றித் திரைப்படங்களில் நடித்துள்ள அஞ்சலி, தற்போது நடிகர் விஷால் நடிக்கும் ‘மகுடம்’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் ‘ஏழுகடல் ஏழுமலை’ திரைப்படத்தில் தனது படப்பிடிப்பு பணிகளை நிறைவு செய்துள்ளதுடன், ஒரு மலையாள திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், தமிழில் அஞ்சலி நடித்து வரும் ‘ஈகை’ திரைப்படம் அவரது 50வது திரைப்படமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு ‘கீதாஞ்சலி மல்லி வச்சிந்தி’ திரைப்படமும் அஞ்சலியின் 50வது படமாக கூறப்பட்டிருந்தது. எனினும் தற்போது ‘ஈகை’ திரைப்படமே அவரது 50வது திரைப்படம் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு அஞ்சலியின் ரசிகர்களிடையே கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
‘ஈகை’ திரைப்படத்தில் அஞ்சலி தனிநாயகியாக நடிக்கிறார். இந்த திரைப்படத்தை இயக்குநர் அசோக் வேலாயுதம் இயக்குகிறார். ஒளிப்பதிவை ஸ்ரீதர் மேற்கொள்கிறார். இசையமைப்பாளர் தரண் குமார் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். பிருந்தா கிருஷ்ணா கிரியேஷன் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் கிருஷ்ண சந்திரன் ராமசபத்தரன் இந்த திரைப்படத்தை தயாரித்து வருகிறார்.
தற்போது இந்த திரைப்படத்தில் நடிக்கவுள்ள மற்ற நடிகர் மற்றும் நடிகைகள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். மேலும், இந்த படத்தில் அஞ்சலி ஆக்ஷன் கதாநாயகியாக நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. “எதுவும் செய்யாமலேயே நீங்கள் நீதியை நிலைநாட்டலாம்” என்பது இந்த திரைப்படத்தின் டேக் லைனாக அமைந்துள்ளது. வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகி வரும் இந்த திரைப்படம் குறித்து ரசிகர்களிடையே அதிக ஆர்வம் நிலவி வருகிறது.
