கன்னட திரையுலகின் முன்னணி நடிகராகவும், இயக்குநராகவும் நீண்ட காலமாக திகழ்ந்து வருபவர் உபேந்திரா. தற்போது அவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள புதிய திரைப்படம் ‘45 தி மூவி’. இந்த படத்தை பிரபல கன்னட இசையமைப்பாளரான அர்ஜுன் ஜன்யா இயக்கியுள்ளார். பேண்டசி அம்சங்கள் கலந்த கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படம், கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கடந்த 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

சமீபத்தில் நடைபெற்ற இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட உபேந்திரா, அரசியல் மற்றும் சமூக நிலைப்பாடுகள் குறித்து சில கருத்துகளை பகிர்ந்துள்ளார். அவர் பேசுகையில், “மக்களை ஆள வேண்டியது கொள்கைகள்தான்; தனி ஒரு தலைவன் அல்ல. மனிதர்கள் காலத்தோடு மாறிக்கொண்டே இருப்பார்கள், ஆனால் கொள்கைகளும் தத்துவங்களும் எப்போதும் மாறாது.
போர் போன்ற சூழ்நிலை ஏற்பட்டால், போர் வேண்டுமா வேண்டாமா என்பதை தீர்மானிக்க வேண்டியது மக்களே. அந்த முடிவை ஒரு தலைவன் மட்டும் எடுக்கக் கூடாது. ஏனென்றால் போரால் நேரடியாக பாதிக்கப்படுவது மக்கள் தான், தலைவர் அல்ல” என்று தனது கருத்துகளை வெளிப்படுத்தினார்.
