லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ‘கூலி’ படம் வெளியானதை தொடர்ந்து பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளானது. குறிப்பாக, படத்தின் கதை மற்றும் திரைக்கதை பலவீனமாக இருப்பதாக விமர்சகர்கள் கருத்து தெரிவித்தனர். இதனையடுத்து, அடுத்ததாக ஹீரோவாக நடிக்கும் தனது படப்பணிகளில் முழுமையாக பிஸியாக இருந்ததால், அந்த விமர்சனங்கள் குறித்து அவர் இதுவரை எந்த பதிலும் அளிக்காமல் இருந்தார். தற்போது, ‘கூலி’ படத்தைச் சுற்றிய விமர்சனங்களுக்கு அவர் பதிலளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் பேசுகையில், “எந்த படமாக இருந்தாலும் விமர்சனங்கள் வருவது இயல்பான ஒன்று. அவற்றை ஏற்றுக்கொள்ள வேண்டும். ‘கூலி’ படத்திற்கு வந்த விமர்சனங்களை நான் மதிக்கிறேன். அந்த படத்திற்கு பிறகு வேறு வேலைகளில் பிஸியாக இருந்ததால் இதுகுறித்து பேசவில்லை. ஆயிரம் விமர்சனங்கள் வந்தாலும், அடுத்த படத்தில் அந்த தவறுகளை சரி செய்வேன். அதே நேரத்தில், விமர்சனங்களைத் தாண்டி ‘கூலி’ படம் 500 கோடிக்கு மேல் வசூலித்ததாக தயாரிப்பாளர் தெரிவித்தார். அதற்கு காரணமாக மீடியா, மீம்ஸ், யூடியூபர்கள் அனைவருக்கும் நன்றி. அதைவிட முக்கியமாக ரசிகர்களுக்கு என் நன்றியை தெரிவிக்கிறேன். என் அடுத்த படங்கள் குறித்த அறிவிப்புகளை படக்குழு அறிவிக்கும்” என தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு தமிழில் அதிக வசூல் செய்த படமாக ‘கூலி’ அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
