சமீபத்தில் கேரளாவில் பிரபல மலையாள குணச்சித்திர நடிகர் சீனிவாசன் காலமானார். அவரது மறைவுக்கு தமிழ் நடிகர்கள் சூர்யா மற்றும் பார்த்திபன் நேரில் சென்று இறுதி அஞ்சலி செலுத்தினர். அந்த நேரத்தில் அங்கு இருந்த இயக்குநர் பாசில், நடிகர் பார்த்திபனை தனது வீட்டிற்கு வருமாறு அழைத்துள்ளார்.

பாசிலின் வீட்டிற்கு பார்த்திபன் சென்றபோது, அங்கு அவரது மகன் நடிகர் பஹத் பாசிலும் உடனிருந்தார். அப்போது பாசில், பஹத் பாசிலை பார்த்திபனிடம் காட்டி, “என் பையன் தான் பஹத்… உங்களுக்கு தெரியும் தானே?” என்று கேட்டுள்ளார். இதற்கு பார்த்திபன், நடிகர் வடிவேலு பாணியில், “சிட்டி, செங்கல்பட்டு, சவுத் ஆற்காடு, நார்த் ஆற்காடு, எப்எம்எஸ், அகில உலகம் வரைக்கும் அவரது நடிப்பு அடைப்பிரதமன் மாதிரி பேமஸ்” என்று நகைச்சுவையாக பதிலளித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து பஹத் பாசிலுடன் பார்த்திபன் உரையாடியபோது, அவர் பார்த்திபனை நீண்ட நேரம் பேசவிட்டு ரசித்துக் கேட்டதாக கூறப்படுகிறது. மேலும், பார்த்திபன் புகைப்படம் எடுக்க விரும்பியபோது, பஹத் பாசிலே அவரது மொபைல் போனை வாங்கி செல்பி எடுத்துக் கொடுத்துள்ளார். இந்த சந்திப்பு குறித்து “மீண்டும் அர்த்தத்துடன் சந்திப்போம்” என்ற சஸ்பென்ஸுடன் பார்த்திபன் தனது சமூக வலைதளப் பதிவில் பகிர்ந்துள்ளார்.
