சமீபத்தில் நடைபெற்ற மகாராஜா படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில், ஒரு பத்திரிகையாளர் விஜய் சேதுபதியை பார்த்து, 200 கோடி, 1000 கோடி வசூல் செய்த படங்களில் நடித்துள்ளீர்கள் என்று மாஸ்டர், ஜவான் போன்ற படங்களை நினைவில் வைத்து கேள்வி எழுப்பினார்.

அதற்கு உடனடியாக பதிலளித்த விஜய் சேதுபதி, “200 கோடி, 1000 கோடி வசூல் என நான் பார்த்ததில்லை. இங்கே பல படங்களுக்கு அட்வான்ஸ் தவிர வேறு எதையும் வாங்காமல் நடித்துக் கொடுத்து வருகிறேன். சம்பளமும் சிலர் சரியாக கொடுக்கவில்லை. ஆனால், தயாரிப்பாளர்கள் ரொம்பவே கஷ்டப்பட்டு படம் எடுப்பதால் அவர்களின் நிலைமையை புரிந்து கொண்டு பெரிதாக எதையும் கண்டு கொள்வதில்லை” எனக் கூறினார்.

நடிகராகவும் தயாரிப்பாளராகவும் பணியாற்றியுள்ள விஜய் சேதுபதி, “கூடிய விரைவில் இயக்குநராகவும் ஆவேன். படம் இயக்குவது எனக்கு ரொம்பவே பிடித்த ஒரு விஷயமாக மாறி வருகிறது. விரைவில் அதற்கான முயற்சிகளை மேற்கொள்வேன்” என்றும் கூறினார்.