பிரபல கேங்ஸ்டராக இருக்கும் அஜித்தை, அவரது மனைவி திரிஷா — மகன் பிறந்த பிறகு — திருந்தி வாழ வேண்டுமென அறிவுரை கூறுகிறார். இதனை ஏற்றுக்கொண்ட அஜித், மனம் மாறி போலீசில் சரணடைகிறார் மற்றும் மும்பை சிறையில் 17 ஆண்டுகள் தண்டனை அனுபவிக்கிறார். தனது பிறந்தநாளில் அப்பா வருவார் என ஒவ்வொரு ஆண்டும் எதிர்பார்த்து இருந்தாலும், அப்பா சிறையில் இருக்கிறார் எனத் தெரியாமல், அஜித் மகனுக்கு 18வது பிறந்த நாள் வருகிறது. ஸ்பெயினில் வசிக்கும் மனைவியையும் மகனையும் சந்திக்க ஜெயிலிலிருந்து முன்கூட்டியே விடுதலையாகி வரும் அஜித்துக்கு ஒரு பெரும் அதிர்ச்சி காத்திருக்கிறது. அவரது மகன், சர்வதேச போலீசால் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார். அவன் எதற்காக சிறை சென்றான், யார் அவனைச் சிக்க வைத்தார்கள், அதன் பின்னணி என்ன என்பதே கதையின் முக்கிய மையமாகும். அதேசமயம், ஜெயிலிலிருந்து தனது மகனை அஜித் காப்பாற்றுகிறாரா என்பதும் படம் முழுவதும் பரபரப்பாகவும் அதிரடி ஆக்ஷன் கலவையோடும், கார் ரேஸ் வேகத்தில் நகரும் வகையிலும், இயக்குநர் ஆதிக் அளித்திருக்கிறார்.
திரையரங்கில் திரை கிழியும் அளவுக்கு, அறிமுகக் காட்சியிலேயே அதிரடியாக களமிறங்கும் அஜித், சகலகலா வல்லவன் படத்தின் “இளமை இதோ இதோ” பாடலின் பின்னணியில் உள்ள சண்டைக் காட்சியில் திரைக்குப் புயலை கூட்டுகிறார். அவ்வப்போது அவர் பேசும் பஞ்ச் வசனங்கள் ரசிகர்களிடம் மிகுந்த மாஸ் லெவலை ஏற்படுத்துகின்றன. உதாரணமாக, “God bless you”, “கூட்டத்தை நான் சேர்க்கறது இல்ல”, “என்றும் என் வழி ஒரே வழிதான்”, “பிரச்சனையைக் கண்டு ஓடக்கூடாது, சந்திக்கணும்”, “உயிரைக் கொடுப்பேன் என சொல்பவனை நம்பக்கூடாது” போன்ற வசனங்கள் ரசிகர்களிடையே மிகுந்த பரபரப்பையும் விசில்களையும் உருவாக்குகின்றன.
மகனை விரும்பும் அப்பாவாக வரும்போது, உணர்வுபூர்வமான காட்சிகளில் அஜித்தின் நடிப்பு பாராட்டுதலுக்குரியது. அவரது மனைவியாக திரிஷா நடித்திருப்பதும் படத்திற்கு ஒரு பெரிய பலமாக அமைந்துள்ளது. அவர் நடித்திருக்கும் ரொமான்ஸ் காட்சிகளிலும், சிறையில் மகனை நினைத்து கதறும் காட்சிகளிலும் அவர் மிகுந்த திறமையை வெளிப்படுத்தியுள்ளார். அஜித்துக்குப் பின் வில்லன் கதாபாத்திரத்தில் இரட்டை வேடங்களில் நடித்திருக்கும் அர்ஜுன் தாஸ் தனது மிரட்டலான நடிப்பால் கவனத்தை ஈர்த்துள்ளார். ஸ்டைலிஷ் வில்லனாக, அவர் பேசிய காந்த குரலிலான வசனங்கள் படத்திற்கு ஒரு முக்கியமான ஆற்றலாக இருக்கின்றன.
“ஒத்த ரூபாய் தாரேன்” பாடலுக்காக அழகிகளுடன் நடனமாடும் அர்ஜுன் தாஸ், ரசிகர்களை ரசிக்க வைத்துள்ளார். அஜித்தின் மாமனாராக வரும் பிரபு, மைத்துனராக வரும் பிரசன்னா மற்றும் நண்பராக வரும் சுனில் ஆகியோர் தங்களுடைய கதாபாத்திரங்களில் பாராட்டத்தக்க நடிப்பைக் காட்டியுள்ளனர். ரெடின் கிங்ஸ்லியின் நகைச்சுவை படத்திற்கு சிறந்த கலவையாக அமைந்துள்ளது. சிம்ரனும் யோகி பாபுவும் சிறப்பு தோற்றத்தில் இடம்பெற்றுள்ளனர். பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப் வில்லத்தனத்தில் மிகவும் திறமையாக நடித்துள்ளார்.
இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் இந்த படத்திற்கு கொடுத்த பாடல்களும், பின்னணி இசையும் ரசிகர்களை ஆட்ட வைக்கிறது. குறிப்பாக பின்னணி இசையில் அவர் மிகுந்த அதிர்ச்சிகரமான வேலை செய்துள்ளார். இருப்பினும், சில இடங்களில் சத்தத்தை கொஞ்சம் குறைத்திருக்கலாம் என எண்ணிக்கொள்ளலாம். ஒளிப்பதிவாளர் அபிநந்தன் ராமானுஜத்தின் ஒளிப்பதிவு காட்சிகளில் பளிச்சென தெரிவதுடன், அஜித் உள்ளிட்ட நடிகர்கள் அனைவரும் திரையில் அழகாக தோன்றியுள்ளனர்.மொத்தமாக, அஜித் போன்ற மாஸ் ஹீரோவை வைத்து ஒரு கமர்ஷியல் திரைப்படமாக, அதனை முழுமையாகப் பொருந்தும் விதமாக இயக்குநர் ஆதிக் இந்தப் படத்தை உருவாக்கியுள்ளார்.