சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் திரைப்படம் ‘பராசக்தி’ எனப்படுகிறது. இந்த படத்தில் ரவி மோகன், ஸ்ரீலீலா மற்றும் அதர்வா ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துவருகிறார்கள். இப்படத்தை டான் பிக்சர்ஸ் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிக்க, ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.
இந்த திரைப்படம் 1965 ஆம் ஆண்டில் நடந்த இந்தி திணிப்பு போராட்டத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்படுகின்றது. இதில் நடிகர் சிவகார்த்திகேயன் ஒரு கல்லூரி மாணவராக நடித்து வருகிறார்.தற்போது, பராசக்தி திரைப்படத்தின் படப்பிடிப்பு இலங்கையில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இந்த படத்தைப் பற்றிய ஒரு முக்கிய தகவலை தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் சமீபத்திய பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார். அதில், “பராசக்தி திரைப்படம் ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தைப் போலவே ஒரு காலகட்ட திரைப்படமாக, மிக பிரமாண்டமான முறையில் உருவாகி வருகிறது. இப்படத்திற்கான கதையை, நேரடியாக நிகழ்ந்த இடங்களில் (லைவ் லொகேஷன்களில்) படமாக்கி வருகிறோம். இப்படத்தின் கதைக்கு ஏற்றவாறே தலைப்பு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. படத்தின் முதல் நாளிலேயே அந்த தலைப்பை முடிவு செய்துவிட்டோம். பாசில் ஜோசப் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படம் அடுத்த ஆண்டில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு வெளியிடப்படவுள்ளது” என தெரிவித்தார்.