நயன்தாரா நடித்த ‘அறம்’ படத்தை இயக்கிய கோபி நயினார், தற்போது இயக்கியுள்ள படம் ‘மனுஷி’. இந்தப் படத்தை வெற்றிமாறன் தயாரித்துள்ளார். இப்படத்தில் ஆண்ட்ரியா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்படும் ஒரு பெண், போலீஸ் நிலையத்தில் அவளுக்கு நேரும் கொடுமைகள்தான் இந்தக் கதையின் மையம்.

இந்தப் படத்தை பார்த்த தணிக்கை குழுவினர், “இந்த படம் அரசின் செயல்பாடுகளை எதிராக விமர்சிக்கிறது. காவல்துறையின் நற்பெயரையும் மதிப்பையும் குறைக்கும் வகையில் உள்ளது” என்ற காரணங்களால் தணிக்கை சான்றிதழ் வழங்க மறுத்துவிட்டனர். இதற்கெதிராக தயாரிப்பாளர் வெற்றிமாறன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில், “ஒரு நிபுணர் குழு அமைத்து, இப்படத்தை மறுஆய்வு செய்து, தணிக்கை சான்றிதழ் வழங்க உத்தரவிட வேண்டும்” என அவர் கோரியிருந்தார்.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, தணிக்கை வாரியத்தின் சார்பில், “மனுஷி படத்தை மறுமுறையாக பார்வையிட்டு, அதில் உள்ள ஆட்சேபனைக்குரிய காட்சிகள், வசனங்களை நீக்கும்படி தயாரிப்பாளருக்கு அறிவிக்கப்படும். தயாரிப்பாளர் அதனை ஏற்று நீக்கினால், பின்னர் சான்று வழங்கப்படுவது குறித்து மறுஆய்வுக் குழு முடிவெடுக்கும். படக்காட்சிகளை நீக்க மறுத்தால், அதுபற்றிய அறிக்கை தாக்கல் செய்யப்படும் என கூறினர். இதையடுத்து, நீதிமன்றம் இந்த வழக்கை வருகிற 17ம் தேதிக்கு ஒத்திவைத்தது.