கடந்த ஆண்டு வெளியான ‘ஸ்ட்ரீ 2’ திரைப்படம் நடிகை ஷ்ரத்தா கபூருக்கு பிளாக்பஸ்டர் வெற்றியைத் தேடி தந்தது. அந்த வெற்றியின் பின்னர், ஏக்தா கபூர் தயாரிக்கவிருக்கும் ஒரு திரில்லர் படத்தில் அவர் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், இந்தப் படத்தை இயக்கவிருக்கும் ரஹி அனில் பாரவே மற்றும் படக்குழு அமைத்த விதிமுறைகள் குறித்து நடிகை ஷ்ரத்தா கபூர் மற்றும் தயாரிப்பாளர் ஏக்தா கபூர் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அந்தவகையில், நடிகை ஷ்ரத்தா ரூ.17 கோடி சம்பளம் கேட்டுள்ளதாகவும், ஒரு பெண் மைய கதாபாத்திரமாக இருக்கும் படத்திற்கு இத்தகைய பெரிய தொகை செலவிடுவது லாபகரமானதாக இருக்காது என தயாரிப்பாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன் விளைவாக, ஷ்ரத்தா கபூர் இந்தத் திட்டத்திலிருந்து விலகி விட்டதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து, புதிய கதாநாயகியை தேர்வு செய்ய தயாரிப்பாளர்கள் தீவிரமாக முயற்சி செய்து வருகின்றனர். இந்தத் திட்டத்தில் புதிய கதாநாயகியாக நடிக்க ஒரு முன்னணி நடிகையுடன் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.