பருத்திவீரன் சரவணன் மற்றும் காதல் சுகுமார் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்க, மும்பையைச் சேர்ந்த சுரேகா மற்றும் நிஷா துபே ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ள படம் ‘போலீஸ் பேமிலி’. சஸ்பென்ஸ் நிறைந்த கிரைம் திரில்லராக உருவாகியுள்ள இந்த திரைப்படத்தை, முன்பு ‘பகை மிரள’ படத்தை இயக்கிய பாலு இயக்கியுள்ளார்.

‘போலீஸ் பேமிலி’ படத்தின் முதல் பார்வையை, இயக்குனர்கள் சசிகுமார், பாண்டியராஜ், நடிகர்கள் பருத்திவீரன் சரவணன், வெற்றி, காளி வெங்கட் மற்றும் ஒளிப்பதிவாளர் பி.ஜி. முத்தையா ஆகியோர் வெளியிட்டுள்ளனர்.
கதை குறித்து படக்குழு தெரிவித்ததாவது: “இது சஸ்பென்ஸ், திரில்லர் மற்றும் உணர்ச்சி கலந்த திரைப்படமாகும். ஒரு போலீஸ் ஸ்டேஷனில் எவ்வாறு பணிகள் நடைபெறுகின்றன, அந்த பணியின்போது அதிகாரிகள் சந்திக்கும் சில எதிர்ப்புகள் மற்றும் பிரச்சனைகள் காரணமாக, அவர்களின் குடும்பம் எவ்வாறு தொந்தரவுக்குள்ளாகிறது என்பதே கதையின் மையம். அந்த சிக்கல்களை அவர்கள் எவ்வாறு சாதுரியமாக கையாளுகிறார்கள், மீண்டு வருகிறார்கள், அதற்கிடையில் அவர்கள் சந்திக்கும் இழப்புகள் என்ன என்பதையும் படம் வெளிப்படுத்துகிறது. இந்தக் கதைக்கு மிகச் சரியாக பொருந்துவதால் ‘போலீஸ் பேமிலி’ என்ற தலைப்பு கதையையே தேடி வந்தது. படம் பார்க்கும் போது, அந்த தலைப்பிற்கான நியாயத்தை கதையில் உணர முடியும்” என்று கூறினர்.