தமிழில் ‘அயோத்தி’ படத்தின் மூலம் கவனம் பெற்றவர் நடிகை பிரீத்தி அஸ்ரானி. தெலுங்கில் ‘பிரஷர் குக்கர்’, ‘சீட்டிமார்’ படங்களில் நடித்து விட்டு ‘அயோத்தி’ மூலம் தமிழுக்கு வந்தார். அதில் அவர் வடநாட்டு பெண்ணாக நடித்திருந்தது அனைவராலும் பாராட்டப்பட்டது. அதன் பிறகு ‘எலெக்ஷன்’, ‘கிஸ்’, ‘பல்டி’ படங்களில் நடித்தார். தற்போது எஸ்.ஜே. சூர்யாவுடன் ‘கில்லர்’ படத்தில் நடித்து வருகிறார். தவிர விஜய் ஆண்டனியுடன் ஒரு படத்தில் நடிக்கிறார்.

பொதுவாக தனது கேரியர், படங்கள் பற்றி மட்டுமே பேசும் பிரீத்தி, சமீபத்தில் நடிகை கவுரி கிஷன் மீது ஒரு யூடியூப்பர் கேட்ட உருவ கேலி மாதிரியான கேள்வி குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறியிருப்பதாவது: ஒருவர் எதையாவது கேட்டுவிட்டு, ‘நான் நகைச்சுவையாகத்தான் கேட்டேன்’ என்று மழுப்ப நினைக்கிறார்கள். ஆனால் எதிர்தரப்பில் உள்ளவர்களுக்கு அது எவ்வளவு வலிக்கும் என்பதை நினைத்துப் பார்ப்பதில்லை.
இந்த விஷயத்தில் நடிகை கவுரி கிஷன் திடமான நிலையில் அந்த கேள்வியை எதிர்கொண்டது நல்ல விஷயம். பத்திரிகையாளர் சந்திப்பு எதற்காக நடக்கிறதோ, அதைப் பற்றிய கேள்விகளைக் கேட்பதுதான் சரியாக இருக்கும். அங்கு ஒருவரைப் பற்றிய தனிப்பட்ட கேள்விகள் தவிர்க்கப்பட வேண்டும்” என்று கூறியுள்ளார் பிரீத்தி.

