கமல்ஹாசன், சிலம்பரசன், திரிஷா உள்ளிட்ட பலர் நடித்த மணிரத்னம் இயக்கிய ‘தக் லைப்’ திரைப்படம் கடந்த வாரம் வெளியானது. இந்தப் படத்திற்கு பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. தமிழில் மட்டும் அல்லாமல் தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் ரசிகர்கள் படம் குறித்து தங்களது கருத்துகளை தெரிவித்தனர்.

இந்த சூழலில், தெலுங்கு சினிமாவின் இளம் இயக்குநர் பனீந்திர நர்செட்டி, இயக்குநர் மணிரத்னத்தை விமர்சிக்க ஒரு தகுதி தேவைப்படுகிறது என்று கூறியுள்ளார். தனது ‘8 வசந்தாலு’ படத்திற்காக அளித்த பேட்டியில், “ஒவ்வொருவருக்கும் தங்களது கருத்தை வெளிப்படுத்த உரிமை இருக்கிறது. ஆனால், மற்றவர்களைப் பற்றி கருத்து சொல்ல நமக்கு ஏற்ற தகுதி இருக்க வேண்டும் என நம்புகிறேன்.
‘தக் லைப்’ படம் வந்த பிறகு, ரசிகர்கள் மணிரத்னத்திற்கு படங்களை எவ்வாறு எடுக்க வேண்டும் என்று கற்றுக் கொடுக்க முனைகிறார்கள். சினிமாவில் 40 ஆண்டுகள் அனுபவம் வாய்ந்த இயக்குநருக்கே அவர்கள் பாடம் சொல்ல முயல்கிறார்கள். ஒரு இயக்குநரை விமர்சிக்க, அவருடைய படங்களை பார்த்து ரசித்த அனுபவமுள்ளவர்களுக்கு உரிமை இருக்கலாம். ஆனால், சினிமா குறித்து எதுவும் அறியாதவர்கள் விமர்சனம் செய்வது தவறாகும். அதனால்தான் நான் ‘தகுதி’ என்ற வார்த்தையை பயன்படுத்துகிறேன்” என அவர் தெரிவித்தார்.
சமீபத்தில், சமூக வலைதளங்களில் “கருத்து தெரிவிக்கிறோம்” என்ற பெயரில் மரியாதை இழந்த முறையில் மற்றும் தரக்குறைவாக எழுதி பேசுவது வாடிக்கையாகிவிட்டது. சில யூடியூப் விமர்சனங்களிலும் ‘தக் லைப்’ திரைப்படம் குறித்த விமர்சனங்களை விட, தனிநபர் தாக்குதல்களே அதிகம் காணப்படுகின்றன என்றே பெரும்பாலும் கூறப்படுகிறது.