மலையாள சினிமாவின் பிரபல நட்சத்திரங்களான மோகன்லால் மற்றும் மம்முட்டி, கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்குப் பிறகு, மீண்டும் ஒரு புதிய படத்தில் இணைந்து நடித்து வருகிறார்கள்இப்படத்தை ‘விஸ்வரூபம்’ படத்தின் எடிட்டராகவும், மலையாளத்தில் ‘டேக் ஆப்’, ‘மாலிக்’ போன்ற படங்களை இயக்கியவருமான மகேஷ் நாராயணன் இயக்கி வருகிறார். இதில் பஹத் பாசில் மற்றும் குஞ்சாக்கோ போபன் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க, நயன்தாரா கதாநாயகியாக நடித்துவருகிறார். இந்த படம் பல்வேறு இடங்களில் பல கட்டங்களாகப் படமாக்கப்பட்டு வருகிறது.

ஏற்கனவே இலங்கையில் ஒரு கட்ட படப்பிடிப்பு நடந்த நிலையில், தற்போது எட்டாவது கட்ட படப்பிடிப்பு மீண்டும் இலங்கையில் துவங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக நடிகர் மோகன்லால் தற்போது இலங்கையில் இருக்கிறார். அவரை வரவேற்கும் வகையில், இலங்கை சுற்றுலாத்துறை வெளியிட்ட அறிவிப்பில், இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படாத இந்தப் படத்தின் தலைப்பு தவறுதலாக ‘பேட்ரியாட்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.
அவர்கள் வெளியிட்ட வரவேற்பு செய்தியில், “நடிகர் மோகன்லாலை மீண்டும் இலங்கைக்கு வரவேற்கிறோம். அவரின் புதிய படத்திற்காக இலங்கை ஒரு மிகச் சிறந்த பின்னணியாக இருக்கும் என்பதாலேயே இது தேர்வாகியுள்ளது. சமீப மாதங்களில் இது இரண்டாவது முறையாக அவர் இலங்கைக்கு வருகிறார், அதற்காக அவருக்கு நன்றி” என்று கூறப்பட்டுள்ளது. மேலும், இந்த கட்ட படப்பிடிப்பு பத்து நாட்கள் நீடிக்கும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.