மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா நடித்திருக்கும் திரைப்படம் ‘தக் லைப்’. இந்த படம் வருகிற 5ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு இசையமைப்பாளராக ஏ.ஆர். ரஹ்மான் பணியாற்றியுள்ளார். இந்த படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் மணிரத்னம் பேசும் போதே, தனது அடுத்த படம் புதுமுகங்களை கொண்டு உருவாக்கப்படும் என்றும், அவ்வாறு சரியான நடிகர்கள் கிடைக்காவிட்டால், வேறு ஒரு திட்டத்தை இயக்கும் திட்டம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த சூழலில் தற்போது சிம்பு நடிக்கவிருந்த 49வது படத்தின் தயாரிப்பு நடவடிக்கைகள் தாமதமாக உள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, அந்த கால்ஷீட்டை மணிரத்னம் பயன்படுத்தி, தனது புதிய படத்தில் சிம்புவை வைத்து இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில், ‘செக்கச் சிவந்த வானம்’, ‘தக் லைப்’ படங்களைத் தொடர்ந்து, மணிரத்னம் இயக்கத்தில் சிம்பு மூன்றாவது முறையாக நடிக்கவிருப்பதாக தெரிகிறது. இந்த புதிய படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.