2018-ம் ஆண்டு வெளியான ’96’ திரைப்படத்தை இயக்குநர் பிரேம் குமார் இயக்கினார். பள்ளி பருவத்தில் ஏற்படும் காதலை மையமாகக் கொண்டு உருவான இப்படத்தில் விஜய் சேதுபதி மற்றும் திரிஷா முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்த படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், ‘96’ திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் இயக்குநர் பிரேம் குமார் பேசும்போது, ‘96’ இரண்டாம் பாகத்திற்கான வேலைகள் நடைபெற்று வருவதாகத் தெரிவித்திருந்தார்.

’96’ இரண்டாம் பாகத்தின் கதை, ஜானுவை தேடி ராம் சிங்கப்பூருக்குச் செல்கிறார் என்பதுதான் என கூறப்படுகிறது. இதனை விஜய் சேதுபதியிடம் கூறியபோது, அவர் இப்படம் உருவாகும் எண்ணத்தில் அதிக ஆர்வம் காட்டவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது. இதன் விளைவாக, பிரேம் குமார், இரண்டாம் பாகத்திற்கான கதாநாயகனாக பிரதீப் ரங்கநாதனை அணுகியதாகச் செய்திகள் பரவின.
இந்நிலையில், ’96’ இரண்டாம் பாகத்தில் விஜய் சேதுபதிக்கு பதிலாக பிரதீப் ரங்கநாதனை ஹீரோவாக அணுகியதாக வந்த தகவலுக்கு மறுப்பு தெரிவித்து இயக்குநர் பிரேம் குமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “இது வழக்கம்போல் ஒரு தவறான செய்தி. ’96-2′ திரைப்படம் உருவாகினால், அதில் ‘96’ படத்தில் நடித்த அதே நடிகர்களே இடம்பெறுவார்கள். நடிகர் திரு பிரதீப் ரங்கநாதனை நான் அணுகியது முற்றிலும் வேறு ஒரு புதிய கதைக்காகவே. அதற்கும் ’96-2’க்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை. இப்போது போல தொடர்ந்து பெருகி வரும் இந்த பொய்யான மற்றும் தீங்கு விளைவிக்கும் செய்திகளை சமாளிப்பது மிகவும் சிரமமாக உள்ளது. உண்மையை வெளிப்படுத்தும் நல்ல எண்ணம் கொண்ட ஊடக நிறுவனங்கள் மற்றும் பத்திரிகை நண்பர்களை மீண்டும் நாடுகிறேன்” என தெரிவித்துள்ளார்.