தமிழ் சினிமாவில் மிகவும் முக்கியமான முன்னணி இயக்குனராக லோகேஷ் கனகராஜ் திகழ்கிறார். அவர் இயக்கிய கமல்ஹாசன் நடித்த “விக்ரம்”, விஜய்யுடன் “மாஸ்டர்” மற்றும் “லியோ”, கார்த்தியுடன் “கைதி” ஆகிய திரைப்படங்கள் அனைத்தும் அதிரடியான கதைக்களத்துடன், வணிக ரீதியாக பெரும் வெற்றியை பெற்றவை.

இந்நிலையில், பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமீர் கான், ஒரு சூப்பர் ஹீரோ படத்திற்காக லோகேஷ் கனகராஜுடன் இணைந்துள்ளார் என்று தெரிவித்துள்ளார். வருகிற ஜூன் 20ஆம் தேதி வெளியிடப்பட உள்ள தனது புதிய படம் “சீதாரே ஜமீன் பர்” குறித்து நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், இந்த தகவலை அவர் உறுதிப்படுத்தினார்.
அந்த நேரத்தில் அமீர் கான் கூறியதாவது, “நான் மற்றும் லோகேஷ் கனகராஜ் இணைந்து ஒரு படத்தில் பணியாற்ற உள்ளோம். அது ஒரு சூப்பர் ஹீரோ படமாகும். மிகப் பெரிய அளவிலான, இந்தப் படம் அடுத்த ஆண்டு இரண்டாம் பாதியில் தொடங்கும்,” என்றார். தாதாசாகேப் பால்கேவின் வாழ்க்கையை திரைப்படமாக உருவாக்க, “பிகே” படத்தை தொடர்ந்து இயக்குனர் ராஜ்குமார் ஹிரானியுடன் மீண்டும் இணைவதாகவும் அவர் கூறியுள்ளார்.