பாலிவுட் நடிகர்கள் தற்போது தென்னிந்திய பட தயாரிப்பாளர்களுடன் இணைந்து பணியாற்றும் முயற்சியில் தீவிரமாக உள்ளனர். அந்த வரிசையில் தற்போது ஹிருத்திக் ரோஷனும் இணைந்துள்ளார். சமீபத்தில், ‘கே.ஜி.எப்’ மற்றும் ‘சலார்’ போன்ற வெற்றிப் படங்களை தயாரித்த ஹோம்பலே பிலிம்ஸ், தனது அடுத்த தயாரிப்பாக ஹிருத்திக் ரோஷனை நடிக்க வைத்திருப்பதை அறிவித்தது. ஆனால் அந்தப் படத்துக்கு இயக்குனர் யார் என்பதைக் குறித்து எந்தவொரு தகவலும் வெளியிடப்படவில்லை.

இந்நிலையில், அந்தப் படத்தை இயக்கும் இயக்குனர் தென்னிந்திய நடிகரும் இயக்குனருமான பிருத்விராஜ் என இணையத்தில் தகவல்கள் பரவி வருகின்றன. பிருத்விராஜ், ‘சலார்’ படத்தில் ஹோம்பலே பிலிம்ஸுடன் இணைந்து பணியாற்றியதோடு, அடுத்ததாக வரவிருக்கும் ‘சலார் 2’ படத்திலும் நடிக்கவுள்ளார்.
அதுமட்டுமல்லாமல், பிருத்விராஜ் இதுவரை மூன்று திரைப்படங்களை இயக்கியுள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இவர் எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கும் ஒரு பெரிய படத்திலும் நடித்து வருகிறார். அந்த படத்தில் வில்லனாகவும் அவர் நடிப்பதாகக் கூறப்படுகிறது.