தெலுங்கு சினிமாவில் முன்னணியில் உள்ள நடிகர் நானி, சமீபத்தில் நடித்து வெளியான ‘சூர்யாவின் சனிக்கிழமை’ திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.அதனைத் தொடர்ந்து, நானி தற்போது ‘ஹிட் 3’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை பிரபல இயக்குநர் சைலேஷ் கொலானு இயக்கியுள்ளார்.
பிரசாந்தி திபிர்னேனி தயாரிப்பில் உருவான இந்த படம் மே மாதம் 1 ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது. ரத்தக் காட்சிகள் நிறைந்த கிரிமினல் ஜானரில் உருவாகியுள்ள இந்த படத்தில் நானி ஒரு போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.இந்தப் படத்தில் நடிகர் கார்த்தி ஒரு சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. படம் குறித்த டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
‘ஹிட் 3’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகவுள்ளது. படத்தின் ரிலீஸுக்கு இன்னும் வெறும் 7 நாட்களே உள்ள நிலையில், ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, படக்குழுவினர் நேற்று மும்பையில் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
சமீபத்தில் இடம்பெற்ற ஒரு பேட்டியில் நானி கூறியதாவது: “இந்த படத்தின் டிரெய்லரை பார்த்த பலரும், இதில் ‘மார்கோ’ மற்றும் ‘அனிமல்’ திரைப்படங்களைப் போலவே அதிக வன்முறைகள் இருக்கும் என நினைத்தனர். ஆனால் உண்மையில் இந்த படம் அந்த வகை இல்லை. ‘ஹிட் 3’ என்பது ஒரு முற்றிலும் மாறுபட்ட கதைக்களம் கொண்ட படம். இதில் திரைக்கதை தொடர்ந்து எதிர்பாராத திருப்பங்களை கொண்டதாய், சுவாரசியமாக நகரும்” என தெரிவித்தார்.