ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன் அடிப்படையில் களமிறங்கிய குஜராத் அணி, 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து மொத்தமாக 198 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, 199 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் குஜராத் அணி 39 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் குஜராத் அணிக்காக விளையாடிய தமிழக வீரரான சாய் சுதர்சன் தனது ஐந்தாவது அரைசதம் அடித்து அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தார். இதன்மூலம், நடப்பு ஐபிஎல் தொடரில் அவர் 8 இன்னிங்ஸ்களில் 5 அரைசதங்களை பதிவு செய்துள்ளார். தற்போது வரை அவர் 8 போட்டிகளில் மொத்தமாக 417 ரன்கள் எடுத்துள்ளார். இதனால் அவருக்கே ஆரஞ்சு நிற தொப்பி கிடைத்துள்ளது.
இந்நிலையில், சாய் சுதர்சன் சிறப்பாக விளையாடி வருவதைக் கண்டு நடிகர் சிவகார்த்திகேயன் அவரைப் பாராட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் (முந்தைய ட்விட்டர்) பக்கத்தில், “நீங்க விளையாடுற விதம் ரொம்ப பிடிச்சிருக்கு சாய் சுதர்சன். இந்தியா ஜெர்சியில உங்களின் அபார திறமையை காண காத்திருக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.