‘தக் லைப்’ திரைப்பட விழாவில் கமல்ஹாசன் தமிழிலிருந்து கன்னடம் உருவான மொழி என கூறியதைக் கொண்டு, அந்த உரையை வைத்து சில கன்னட அமைப்புகள் சர்ச்சையை உருவாக்கி வருகின்றன. இந்நிலையில், பெங்களூருவில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிவராஜ்குமார், இது தொடர்பாக தனது கருத்தை தெரிவித்தார். “நான் எப்போதுமே கமல் சாரின் தீவிர ரசிகன். அவருடைய ஒவ்வொரு செயலும் எனக்கு ஒரு பெரிய ஊக்கமாக இருந்தது. அவர் எப்போதும் நம்ம ஊரைப் பற்றியும், என்னைப்பற்றியும், என் குடும்பத்தைப்பற்றியும் பெருமையாகப் பேசுகிறார். அதை எல்லாம் நினைவில் வைத்திருக்காமல், கன்னட மொழியைப் பற்றிய ஒரு கருத்தை மட்டும் எடுத்துக்கொண்டு பேசுவது சரியல்ல. அவரது பட விழாவுக்கு என்னை சிறப்பு விருந்தினராக அழைத்ததே எனக்கு பெருமையாக உள்ளது.

மேலும், நேற்று அவரே இங்கே வந்திருந்த நேரத்தில் அவரிடம் நேராகவே இதைப் பற்றி கேட்டிருக்கலாம். ஆனால் யாரும் கேட்கவில்லை. கேட்டிருந்தால், அதுகுறித்து நேரில் அவரே விளக்கம் அளித்திருப்பார். அப்போது நீங்கள் எல்லோரும் அமைதியாக இருந்தீர்கள். இப்போது ஒருவர் பேசினாலே, அதை வைத்து மொழிபற்றிய பாசம் காட்டுவது யோசிக்க வேண்டிய விஷயம்தான். உங்கள் பாசம் உண்மையானதாயிருந்தால், நீங்கள் நடத்தும் எல்லா நிகழ்ச்சிகளிலும் மொழியை கொண்டாடுங்கள்” என தெரிவித்தார்.
மேலும், “தேவைப்பட்டால் கன்னட மொழிக்காக உயிரைக் கொடுப்பேன் என பெருமையாகக் கூறுபவர்கள், கன்னட சினிமாவுக்காக என்ன செய்கிறீர்கள்? புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுத்தீர்களா? கன்னடத்தின் வளர்ச்சிக்கு அனைத்து துறைகளிலும் ஆதரவு தர வேண்டியது ஒவ்வொருவரின் கடமையாகும். நான் சொல்வது சரியா தவறா என்பதை உங்கள் மனசாட்சியிடம் கேட்டுப் பாருங்கள்; பதிலை பெறுவீர்கள். மேலும், கமல் சார் எப்போதுமே அனைவரையும் மதிக்கும் சிறந்த திரைக்கலைஞர். அவர் எந்த மொழியையும் தவறாக சித்தரிக்க விரும்புபவர் அல்ல. என்மீது உள்ள பாசத்தின் காரணமாக அவர் கூறியதை தவறாக புரிந்து கொண்டிருப்பது தான் உண்மை” என்று நடிகர் சிவராஜ்குமார் திட்டவட்டமாக பேசியுள்ளார்.